ஈரோடு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்ததாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி உறவினரிடம் பலமுறை தனக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து கூறியுள்ளார். அதுகுறித்து விசாரித்தபோது சிறுமியுடன் வளர்ப்புத் தந்தை பாலியல் உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. 



புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அதில் சிறுமி கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து வளர்ப்பு தந்தையான சையத் அலி என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் மூலம் வரும் கருமுட்டைகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்கு சிறுமியின் தாய் இந்திராணி மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மாலதி உள்ளிட்டோரை கைது செய்தனர். 16 வயது சிறுமிக்கு கருமுட்டை மருத்துவமனையில் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்த விசாரணையில், சிறுமியின் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை செய்துகொடுத்த ஜோசப் என்பவரும் கைது செய்யப்பட்டார். 


சிறுமியின் வளர்ப்புத் தந்தையான சையத் அலி, சிறுமியின் 12 வயதில் இருந்து அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு அதன் மூலம் கிடைக்கும் கருமுட்டையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அதில் 5,000 ரூபாய் இடைத்தரகராக செயல்பட்ட மாலதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேர் கொண்ட சுகாதாரத்துறையினர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.



இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை கடந்த மாதம் 15 ஆம் தேதி மூடப்பட்டது. மருத்துவமனையில் ஆறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு வாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. புதிதாக நோயாளிகள் சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை.


தற்போது சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து திரும்பிய நிலையில் சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையிலான அதிகாரிகள் இன்று தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர், ஆவணம் பாதுகாப்பு வரை உள்ளிட்ட 8 அறைகளை முழுமையாக மூடி சீல் வைத்தனர். பின்ன சீல் வைத்த உடன் மருத்துவமனையின் சாவியை மருத்துவமனையின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறியது,


கருமுட்டை விவகாரத்தில் சேலம் தனியார் மருத்துவமனை முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூடுதல் அவகாசமாக இரண்டு வாரங்கள் கொடுக்கப்பட்டது. தற்போது நோயாளிகள் குணமடைந்து திரும்பி நிலையில் தனியார் மருத்துவமனையில் உள்ள எட்டு அறைகளும் முழுமையாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.