சேலம் மாவட்டம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமல் குமார். அவருடைய மனைவி மேகலா. இவர்களுக்கு 4 வயதில் மதுப்பிரித்திகா என்ற பெண் குழந்தை உண்டு. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான மேகலா பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செவ்வாய்பேட்டை சோழப்பாடி சுப்பிரமணியர் தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். இதற்கிடையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு மேகலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மேகலாவை அவரது தாய் சாந்தி (52) துணியை காயப்போடுவதற்காக மொட்டை மாடிக்கு அனுப்பி வைத்தார். 



இதையடுத்து அவர் மதுப்பிருத்திகா இருந்த அறைக்கு சென்றார். அப்போது அவர் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக் கொண்டார். துணியை காயப்போட்டுவிட்டு கீழே வந்த மேகலா, தாய் சென்ற அறையின் கதவை தட்டினார். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மேகலா சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதைகேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் சாந்தி, குழந்தை கீர்த்திக் படுத்திருந்த அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் அந்த அறையின் கதவும் உடைக்கப்பட்டது. 



இதையடுத்து உள்ளே புகுந்த அவர்கள் சாந்தியிடம் இருந்து கீர்த்திக்கை மீட்டனர். இதற்கிடையில் முதல் அறையில் சுயநினைவின்றி இருந்த மதுப்பிருத்திகாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் மதுப்பிருத்திகா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்தும் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், சாந்தி கடந்த 6 மாதமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் குழந்தை மதுப்பிருத்திகாவை அவரது பாட்டி சாந்தி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். மற்றொரு குழந்தை கீர்த்திக்கை கொலை செய்ய முயன்ற போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை காப்பாற்றியது தெரியவந்தது. மகளின் குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.