Youtubeல் ஹோம் டூர் வீடியோ.. வீடு புகுந்து நகை, பணத்தை திருடிய கும்பல்.. அதிர்ச்சியில் பெண் பிரபலம்!
கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலையில் திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் தங்கள் முகங்கள் பதிவாகாதபடி அதன் கோணங்களை மாற்றியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் ஹோம் டூர் என்ற பெயரில் தன்னிடம் இருக்கும் நகைகள் பற்றி வீடியோ வெளியிட்ட பெண்ணின் வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்ட இந்த காலத்தில் குற்றச்சம்பவங்கள் பல வகையிலும் நடைபெறுகிறது. இதனிடையே யூட்யூபில் ஹோம் டூர் என்ற நிகழ்வு மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி இருந்து வருகிறது. அதாவது ஒருவர் தனது வீட்டு வாசல் தொடங்கி பீரோவில் இருக்கும் துணிகள், சமையலறை என சகல விஷயங்களையும் காட்டி தாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை இந்த ஹோம் டூர் வீடியோவில் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தர்ம சங்கடமான நிலையில் மாட்டிக் கொண்டுள்ளார். அதாவது அங்கிருக்கும் மோகனி கிராமத்தில் ரச்னா குர்ஜார் என்ற பெண் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்குள் திடீரென வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரச்னாவையும், அவரது குடும்பத்தினரையும் ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், பணத்தையும் அள்ளிச் சென்றனர். திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக சிவ்புரி மாவட்ட போலீசாரிடம் ரச்னா புகார் அளித்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, “கடந்த ஜூன் 6ம் தேதி அதிகாலையில் திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் தங்கள் முகங்கள் பதிவாகாதபடி அதன் கோணங்களை மாற்றியுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு குடும்பத்தினர் கண் விழித்தபோது தான் அறைக்கதவு வெளியில் பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து செல்போன் மூலம் உறவினரை வரவழைத்து வெளியே வந்து பார்த்தபோது தான் இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குற்றவாளிகளை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், இந்த குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்த நபராக இருக்கலாம் எனவும் போலீசார் முதலில் தெரிவித்தனர். ஆனால் இந்த திருட்டு சம்பவம் நடைபெற முதல் காரணமே ரச்னா வெளியிட்ட ஒரு வீடியோ தான் என தெரிய வந்துள்ளது. ரச்னா குர்ஜார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட தனது யூட்யூப் பக்கத்தில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
Also Read: CM Vijay: தூயசக்திக்கு அர்த்தம் தெரியுமா முதல்வரே... விஜயை வெளுத்து வாங்கிய ஹெச்.ராஜா!
அதில், வீட்டின் நுழைவாயில் முதல் அறைகள் வரையிலான பல்வேறு பகுதிகளைப் பதிவு செய்து பெருமைப் பொங்க பேசியுள்ளார். மற்றொரு வீடியோவில் வீட்டில் இருக்கும் நகைகள், பணம் அனைத்தையும் காட்டியுள்ளார். இந்த வீடியோ திருட்டிற்கு அடிப்படையாக இருக்கலாம் என கருதியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















