கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக திருப்பாலப்பந்தல் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி எனும் கூலி தொழிலாளி. இவரது இரண்டு வயது ஆண் குழந்தை திருமூர்த்தி  கடந்த 17ஆம் தேதி தமது வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தது. பின்னர் மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணவில்லை என திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நான்கு நாட்களாக திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் இன்று காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் ஒன்றில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் காணாமல் போன இரண்டு வயது சிறுவன் திருமூர்த்தி சடலமாக இருந்தது தெரியவந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் உறவினர்கள் உடனடியாக திருப்பாலப்பந்தல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இந்த தகவலின்  பேரில் அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.