சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட மன வளர்ச்சி குன்றிய பெண்ணை மருத்துவமனை கழிப்பறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 108 ஆம்புலன்ஸ் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் திடுக்கிட வைத்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய  24 வயது பெண்ணுக்கு கடந்த 18 ஆம் தேதி காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் வயதான தாய் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி 108 ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மன வளர்ச்சி குன்றிய பெண்ணையும் அவருக்கு துணையாக வயதான தாயும் ஆம்புலன்ஸ் ஊழியர்களால் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளராக முதுகுளத்தூர்  அடுத்த செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் வந்துள்ளார்.


அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர்களை அனுமதித்த சிறிது நேரத்திலேயே அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதாக பெண்ணின் வயதான தாயாரிடம் கூறிவிட்டு, நைசாக அழைத்துச் சென்றுள்ளார். புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடத்திற்குள் அமைந்துள்ள கழிவறைக்குள் அழைத்துச் சென்று, "தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது"  என்பது கூட உணர முடியாத அளவிற்கு மன வளர்ச்சி குன்றிய அந்தப் பெண்ணை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.




இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மன வளர்ச்சி குன்றிய பெண் அவருக்காக ஒதுக்கப்பட்ட சிகிச்சை பெட்டில் இல்லாமல் இருப்பதைக் கண்டு அங்கிருந்த அவருடைய தாயாரிடம் வார்டு செவிலியர் விசாரித்துள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பாலமுருகன் அழைத்துச் சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இன்னும் அழைத்து வரவில்லை என கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வார்டு செவிலியர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடிச் சென்றுள்ளார். இதற்கு இடையே ஒன்றரை மணி நேரம் கழித்து அப்பெண்ணை  அவசர சிகிச்சை பிரிவில் கொண்டு வந்து விட்டு விட்டு சத்தம் இல்லாமல் அங்கிருந்து நைசாக நழுவி விட்டார் பாலமுருகன்.


வெளியே தேடிச்சென்று மீண்டும் வார்டுக்கு வந்த செவிலியர் அப்பெண் பெட்டில் படுத்திருந்ததை பார்த்து அவரிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது பாலமுருகன் அப்பெண்ணை கழிவறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீசார் பாலமுருகனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து சாதாரணமாக விசாரித்துள்ளனர். அப்போதுதான் ஆம்புலன்ஸ் உதவியாளர் பாலமுருகன் தனது "மைனர் குஞ்சு" வேலையை காட்டியுள்ளார். "தவறு நடந்தது உண்மைதான்" என ஒப்புக் கொண்ட அவர், ஆனால் விசயம் வெளியே தெரியாமல் இருக்க அப்போதைக்கு அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் முதல் கான்ஸ்டபிள் வரை திருப்தியாக பைகளை நிரப்பியதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பாலமுருகனை எதுவுமே நடக்காதது போல் வழக்கு எதுவும் பதியாமல் விசாரணையை முடித்துக்கொண்ட போலீசார் அவரை பத்திரமாக திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன வளர்ச்சி குன்றிய அப்பெண்ணும் அவரது தாயாரும் திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளனர்.


கடந்த இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் வெளியே தெரியாத வகையில் மருத்துவமனை அதிகாரிகளும் மற்றும் போலீசாரும் மூடிமறைத்து வந்துள்ளனர். இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக தகவல்கள் வெளியே கசிந்து மருத்துவ கல்லூரி  முழுவதும், சினிமா காட்சியில் வரும் காமெடி வசனம் போல, "ராமநாதபுரத்தில் மைனர் குஞ்சுகள் ஜாக்கிரதை" என இதுதொடர்பாக முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர்.


"நேர்மையான எஸ்.பி.யால்  பாய்ந்த நடவடிக்கை"


இந்த தகவல் நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து நகர் காவல் நிலைய காவலர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களை பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யாமல் இருந்தது குறித்து கடுமையாக எச்சரித்து, பாலமுருகனை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.


அதன்படி நேற்று, நள்ளிரவு முதுகுளத்தூர் அடுத்த செல்லூரில் அவரது வீட்டில் இருந்த பாலமுருகனை இரவோடு இரவாக போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய  ஆய்வாளர் அமுதா விசாரணை நடத்தினார். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திருவாடானையை சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் முகவரியை தேடி கண்டுபிடித்து, அப்பெண்ணையும் அவரது தாயாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை அடுத்து, ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மைனர் குஞ்சு வாய் மாறி மனவளர்ச்சி குன்றிய பெண்ணை நாசமாக்கியது தெரிய வந்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த 18ஆம் தேதி ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் தெரிந்தும், குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமலும், கைது செய்யாமலும் போலீசார் அலட்சியப்போக்குடன் இருந்துள்ளது பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.