ரூபாய்.1 கோடிக்கு பேரம் பேசி, புழல் சிறையில் மதுரை ரவுடியை கொல்ல சதி?

சென்னை புழல் சிறை
 
சென்னை புழல் தண்டனை சிறையில் சுமார் 1400க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தமிழகத்தில் முக்கியமான சிறைகளில் புழல் சிறையும் உண்டு. இதனால் புழல் சிறை பல்வேறு அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளது. பல்வேறு முக்கிய வழக்கு குற்றவாளிகள் புழல் சிறையில் தண்டனைபெற்று வருகின்றனர். இந்நிலையில் ரிவெஞ்ச் எடுக்கும் விதமாக சக சிறைவாசிகள் மூலம் மற்றொரு சிறை வாசியை கொலை செய்ய திட்டமிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து, குற்ற சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
ரவுடி வெள்ளைக் காளியை கொலை செய்ய திட்டம்? 
 
 மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி (எ)  காளிமுத்து (35) கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு 2024ம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். வெள்ளைக் காளிக்கும் மற்றொரு குடும்பத்திற்கும் மதுரையில் பகை இருந்து வருகிறது. இதனால் வெள்ளைக் காளி உறவினர்களும் மற்றும் நண்பர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே போல் எதிர் தரப்பிலும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் வெள்ளைக் காளி மதுரையின் முக்கிய ரவுடியாக பார்க்கப்பட்டு வருகிறது. வெள்ளைக் காளி மற்றும் அவரது எதிர் தரப்பையும் காவல்துறை கண்காணித்து வருகிறது. இந்த சூழலில் வெள்ளைக் காளியை புழல் சிறையில் கொலை செய்ய முயற்சி நடந்ததாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொலை செய்ய திட்டம்? - வழக்கறிஞர் மனு மூலம் தகவல்
 
புழல் தண்டனை சிறையில் உள்ள சென்னை எர்ணாவூரை சேர்ந்த ரகுமான் (31), ஓட்டேரியை சேர்ந்த அஜய் (23), திருச்சியை சேர்ந்த சீவலபெரியான் (33), தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (எ) லாலி மணிகண்டன் (35) ஆகியோரிடம் வழக்கறிஞர் ஒருவர் மனு பார்க்க வரும்போது, வெள்ளைக்காளியை சிறையில் கொலை செய்து விடுங்கள், ரூபாய்.1கோடி தருவதாக லாலி மணிகண்டனிடம் தெரிவித்ததாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை யில் சிறைத்துறை அதி காரிகளின் உத்தரவின் பேரில், ரகுமான் திருச்சி சிறைக்கும், அஜய், சீவல பெரியான் கடலூர் சிறைக் கும், லாலி மணிகண்டன் சேலம் சிறைக்கும் நேற்று காலை புழல் சிறையில் இருந்து மாற்றப்பட்டனர். இதனால் சிறையில் நடைபெற இருந்த வெள்ளை காளி கொலை, உளவுத்து றையினால் தடுக்கப்பட்ட தால் சிறை அதிகாரி மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் லாலி மணிகண்டனிடம் போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை செய்த போது, செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் யார் யாருடன் பேசிக் கொண்டிருந்தார், எதற்காகபேசினார், இந்த செல் போனை கொடுத்தவர்கள் யார், எப்படி வந்தது என்ற பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.