Pune Murder: தன்னை திருமணம் செய்யவிருந்த கேதனை பேச அழைத்துச் சென்று மலையின் மீது இருந்து கீழே தள்ளி சியா கோயல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

”அதே மலையில் இருந்து கீழே தள்ளுங்கள்”

தங்களது மகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கேதன் அகர்வால் கொலை செய்யப்பட்ட அதே மலையில் இருந்து கீழே தள்ளி கொல்லுங்கள் என, சியா கோயலின் பெற்றோர் மனமுடைந்து பேசியுள்ளனர். புனேவைச் சேர்ந்த சியா, அவரது காதலன் என கூறப்படும் பாபுலால் சவுத்ரி உடன் சேர்ந்து, நிச்சயம் செய்யப்பட்டு தனது கணவராகவிருந்த கேதன் அகர்வாலை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சஹ்யாத்ரி மலைத்தொடரில் உள்ள லோகட் கோட்டையிலிருந்து 26 வயதான கேதன் அகர்வாலை சியாவும் சேதனும் தள்ளிவிட்டதில் , அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் தற்செயலான விபத்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

”எனது மகளையும் மலையில் இருந்து தள்ளுங்கள்”

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் வரும் நவம்பர் மாதம் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சியா கோயலின் பெற்றோர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளனர். அப்போது பேசிய தாயார் பூஜா கோயல், ”தனது மகள் சியா, கேதனுடனான தனது திருமணம் குறித்து ஒருபோதும் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. கேதனின் மரணம் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, இரண்டு குடும்பங்களையும் சீர்குலைத்துவிட்டதால், அவரது குடும்பத்தினரை விட தான் அதிக வேதனையில் இருக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் தன் மகளாக இருந்தாலும், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். என் மகள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், கேதன் தள்ளி கொல்லப்பட்ட அதே இடத்திலிருந்து அவளையும் தூக்கி எறிய வேண்டும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

எனது மகள் என்பதால் ஆதரவாக பேசமாட்டேன்..

சியாவின் தந்தை பிரவீன் கோயல் பேசுகையில், "கேதன் வீழ்ந்த கோட்டையிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் என் சொந்த மகளாக இருந்தாலும் கீழே தள்ளப்பட வேண்டும். இதை நம்பவே கடினமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் மகனை இழந்துவிட்டார்கள், அந்த மகன் எங்களுக்கும் சொந்தமானவன்தான். நாங்கள் அவனை மிகவும் நேசித்தோம். அவன் மீது எனக்கு இருந்த பாசம், அவன் எங்கள் சொந்த மகன் போலவே இருந்தது. அப்படிப்பட்ட அன்பான, நம்பிக்கைக்குரிய, நல்ல பையனை நாங்கள் இழந்துவிட்டோம். அதனால் நாங்கள் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறோம்" என்று பிரவீன் கோயல் கவலை தெரிவித்துள்ளார்.

கொலையில் முடிந்த முக்கோண காதல்..

நண்பர்கள் குடும்பத்தைச் சேர்ந்த கேதனுக்கும், சியாவிற்கும் இடையே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கடந்த ஆண்டு தொழில்ரீதியான கூட்டத்தில் சேதனைச் சந்தித்த நிலையில், சியா மற்றும் சேதன் இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில்  காதலாக உருவெடுத்துள்ளது. சியா ஒரு பேக்கரியை நடத்தி வந்த நிலையில், சேதன் உலர் பழங்கள் வியாபாரம் செய்து வந்தார். கேதன், சக்சஸ் குரூப் என்ற குடும்பத்தால் நடத்தப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராகவும், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாகவும் (CMO) இருந்தார்.

இதையும் படியுங்கள்: Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, சியா கேதனைத் திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும், தனது இந்த நிலைப்பாட்டை வருங்காலக் கணவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், திருமணத்தை ரத்து செய்ய கேதன் தயாராக இல்லை என்றும், அதன் விளைவாகவே கொலை செய்ததாகவும் விசாரணையின் போது சியா கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.