Domestic Violence: மனைவியை சமாதானப்படுத்த மாமனார் வீட்டிற்கு சென்ற நபர், மைத்துனர் உயிரோடு தீ வைத்து கொளுத்தியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Continues below advertisement

சகோதரியின் கணவரை கொளுத்திய மைத்துனன்:

பஞ்சாபின் தர்ன் தாரன் மாவட்டத்தில், சண்டையிட்டு பிரிந்து வாழும் தனது மனைவியை வீட்டிற்குத் திரும்ப வருமாறு சமாதானப்படுத்தச் சென்ற ஒருவரை, அவரது மைத்துனர் தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற பெண் ஒருவரும் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீ வைத்து கொளுத்தபட்டதில் உயிரிழந்தவர்கள் லவ்பிரீத் சிங் மற்றும் குர்ஜித் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

வெளியாகியுள்ள தகவல்களின்படி,  லவ்பிரீத் சிங் கடந்த ஜுன் 13ம் தேதியன்று ஏற்பட்ட, கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் தங்குவதற்காகச் சென்றிருந்த தனது மனைவி சந்தீப் கவுரை வீட்டிற்குத் திரும்ப வருமாறு சமாதானப்படுத்துவதற்காகத் தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.தனது மனைவியுடன் சமாதான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார். அப்போது ​​சஜன் சிங் என அடையாளம் காணப்பட்ட அவரது மைத்துனர், லவ்பிரீத் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றித் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த சஜன் சிங்கின் மைத்துனியான குர்ஜித் கவுர், லவ்பிரீத்தைக் காப்பாற்ற விரைந்தபோது, ​​அவரும் அந்தச் சம்பவத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனிடையே, இந்த சம்பவத்தில் சஜன் சிங்கும் தீக்காயங்களுக்கு ஆளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சை உலுக்கும் வீடியோ..

இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்  தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தக் காணொலியில், எரிபொருள் ஊற்றப்பட்ட நிலையில் லவ்பிரீத் சிங் நின்றிருக்க அவரை தீயிட்டு கொளுத்த முயலும் சஜன் சிங்கை குர்ஜித் கவுர் தடுக்க முயன்றுள்ளார். அவரை உதறி தள்ளிவிட்டு சஜன் தீ வைத்ததில் லவ்பிரீத் உடல் மீது மட்டுமின்றி அந்த பகுதி முழுவதுமே நொடி நேரத்தில் தீ பரவியுள்ளது. நொடி நேரத்தில் மூன்று பேர் மீதும் தீ பரவி ஆளுக்கு ஒரு திசையை நோக்கி அலறியடித்து ஓடியுள்ளனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து வெடிகுண்டு வெடித்ததை போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.. அந்த பிரச்னையை தீர்க்க வந்த ஒருவர் உடனடியாக விரைந்து குர்ஜித் கவுர் மீதிருந்த தீயை அணைக்க முயல்வது வரையிலான காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும் நிலை தடுமாறிய லவ்பிரீத் சிங் அருகிலிருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சஜன் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்