Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Crime News: மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு அவர் காணாமல் போனதாக நாடகமாடி ஏமாற்றிய கணவனை புனேவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Crime News: மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு, அவருக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு இருப்பதாக கணவர் நாடகமாடியுள்ளார்.
சினிமா பாணியில் கொலை
சினிமா கதைகளையே மிஞ்சும் வகையில் புனேவைச் சேர்ந்த நபர், தனது மனைவியை கொன்று உடலை எரித்து அப்புறப்படுத்தியுள்ளார். ஆனால், போலீசில் சிக்கக் கூடாது என்பதற்காக காவல்நிலையத்தில் அவர் காணாமல் போனதாக புகார் அளித்ததோடு, எனது மனைவியை கண்டுபிடித்துவிட்டீர்களா? என அடிக்கடி நேரில் சென்றும் விசாரித்துள்ளார். மனைவியை கொன்ற பிறகு அவரது செல்போனில் இருந்து வேறொரு நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் சித்தரிக்க முயன்றுள்ளார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் மொத்த நாடகமும் அம்பலமாக, சினிமா பார்த்தே தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நடந்தது என்ன?
பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த அஞ்சலி என்பவரை, கடந்த 2017ம் ஆண்டு சமீர் ஜாதவ் திருமணம் செய்துள்ளார். ஆட்டோமொபைல் டிப்ளமோ படித்து முடித்திருந்த நபர், சொந்தமாக கராஜ் ஒன்றை நடத்தி வந்துள்ளார். புனேவின் சிவானா நகரில் வசித்து வந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் முறையே 3 மற்றும் 5ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி தான் புதியதாக வாடகைக்கு எடுத்துள்ள கிடங்கை காட்டுகிறேன் என கூறி தனது மனைவியை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதுமே அங்கு அஞ்சலியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து அங்கு ஏற்கனவே தான் தயார்படுத்தி வைத்திருந்த,இரும்பு உலையில் அஞ்சலியின் உடலை எரித்து சாம்பலை அருகில் இருந்த ஆற்றில் கரைத்துள்ளார். சம்பவம் நடந்த நேரத்தில் இந்த தம்பதியின் குழந்தைகள், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு சென்றுள்ளனர்.
அம்பலமான ஓவர் நடிப்பு
தொடர்ந்து, சமீர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவி காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். மீண்டும் மீண்டும் அங்கு வந்து காணாமல் போன எனது மனைவியை காவல்துறை எப்போது கண்டுபிடிக்கும்? கொலையாளியை கண்டுபிடிப்பதில் அவர்கள் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளனர்? என அடிக்கடி விசாரித்துள்ளார். அவரது செயல்பாட்டால் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த சூழலில் தான் சமீர் ஜாதவ் தொடர்பான விசாரணை, சிசிடிவி காட்சிகளின் பகுப்பாய்வு மற்றும் முழுமையான தொழில்நுட்ப விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் உண்மை வெளிப்பட்டுள்ளது. அவரது வாக்குமூலங்களுக்கும் தொழில்நுட்ப ஆதாரங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் காவல்துறையின் கவனத்தை சமீர் மீது முழுமையாக திருப்பியுள்ளன. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். த்ரிஷ்யம் திரைப்படத்தை நான்கு முறைக்கு மேல் பார்த்தே, இந்த கொலை திட்டத்தை தீட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
தகாத உறவால் கொலை
மனைவியின் மீது இருந்த சந்தேகத்தின் காரணமாகவே முதலில் கொலை செய்ததாக காவல்துறையினர் நம்பினர். ஆனால், சமீருக்கே வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனாலும் தனது திட்டப்படி மனைவியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்த, அஞ்சலியின் செல்போனில் இருந்து தனது நண்பர்களில் ஒருவருக்கு “ஐ லவ் யு” என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதற்கு தானே பதிலையும் அனுப்பியுள்ளார். காவல்துறை விசாரணைக்காக இதனை ஆதாரமாகவும் சமீர் சமர்பித்துள்ளார். உண்மைகள் அனைத்தும் வெளியான நிலையில், சமீரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.





















