புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து காதலனை தாக்கி துரத்தி விட்டு 3 பேர் கொண்ட கும்பல் வடமாநில மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில், அதே போன்றதொரு சம்பவம் புதுச்சேரி பல்கலையில் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை, முதுநிலை என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வட மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து முதலாமாண்டு இளநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இந்த மாணவி இதே கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், இருவரும் கல்லூரி வளாகத்தில் வேதியியல் பிரிவு கட்டிடத்தின் பின்புறம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த 3 பேர் கும்பல், அங்கிருந்த ஜோடியிடம் சென்று இங்கு என்ன செய்கிறீர்கள்? எதற்காக வந்தீர்கள் எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட மாணவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. பின்னர் அங்கிருந்த மாணவியை 3 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற மாணவியை மீண்டும் துரத்தி பிடித்ததோடு, மாணவியை சரமாரியாக தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட மாணவி உடனே கத்தி கூச்சலிடவே, பயந்து போன கும்பல் அவரை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளது. இதில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த மாணவி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பி உள்ளார்.
பாதிக்கப்பட்டவர் வடமாநில மாணவி என்பதால் காவல்துறைக்கு செல்ல பயந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே வந்தால் பல்கலைக்கழகத்துக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தவர்களில் 2 பேர் புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியையும், ஒருவர் வில்லியனூர் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மேலும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.