குறைந்த வட்டியில் கடன் ! மோசடியில் சிக்கி பணத்தை இழந்த 6 பேர்... எத்தனை லட்சம் தெரியுமா ?
புதுச்சேரியில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி 4 பெண்கள் உட்பட 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1.32 லட்சம் இழப்பு.

புதுச்சேரி: புதுச்சேரியில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி 4 பெண்கள் உட்பட 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 1.32 லட்சம் இழந்துள்ளனர்.
குறைந்த வட்டியில் கடன்
புதுச்சேரி முத்திரையார் பாளையத்தை சேர்ந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் 3 லட்சம் வரை கடன் தருவதாக தெரிவித்துள்ளார். கடன் பெற செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பி, அந்த பெண் 35 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த நபர் 41 ஆயிரத்து 500, அரியூரை சேர்ந்த பெண் 29 ஆயிரத்து 271, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 11 ஆயிரம், கதிர்காமத்தை சேர்ந்த நபர் 2 ஆயிரத்து 400, வில்லியனுாரை சேர்ந்த பெண் 12 ஆயிரத்து 399 என, 4 பெண்கள் உட்பட 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 70 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் கூறுகையில்;
பொது மக்களை மும்பை சைபர் கிரைம் போலீசார் பெயரை கூறி, பார்சலில் போதைப் பொருள் வந்துள்ளது என, மிரட்டுவது. வங்கியில் இருந்து பேசுவதாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு புதுப்பிக்க வேண்டும் எனவும், அதற்காக பாஸ்வேர்டு, ஓ.டி.பி., (otp) எண்ணை வாங்கி, பணம் பறிப்பது.
டெலிகிராம், இன்ஸ்டாகிராம் பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலை தளங்களில், டாஸ்க்கை முடித்தால், அதிக பணம் தருகிறோம் எனக் கூறி ஏமாற்றுவது. போலி விளம்பரங்களை செய்து, பணம் பறிப்பது. பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என பல்வேறு வகையில் மோசடி கும்பல், பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், 65.2 கோடி ரூபாயை பொது மக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதில், பெண்களுக்கு எதிரான 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்து, 11 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரை 1930 எண் ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.





















