புதுச்சேரி: புதுச்சேரியில் போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து ஜிப்மர் ஊழியர் ரூ. 2.49 கோடியை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.

Continues below advertisement

ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு - ரூ. 2.49 கோடியை மோசடி 

புதுச்சேரி, ஜி.என்.பாளையம், எழில் நகரை சேர்ந்தவர் சக்தி, 26; ஜிப்மர் ஒப்பந்த ஊழியர். இவர் ஆன்லைன் டிரேடிங் செய்ய விரும்பி சமூக வலைதளத்தில் தேடியுள்ளார். அப்போது, யூடிப்பில் டிரேடிங்கில் முதலீடு செய்து எப்படி திறமையாக சம்பாதிக்கலாம், அதிக லாபம் தரும் டிரேடிங் நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து கொள்ளும்படி விளம்பரம் வந்துள்ளது.

இதை நம்பிய சக்தி, அந்த வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்துள்ளார். பிறகு, அந்த குரூப்பில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் டிரேடிங் தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிவித்து விட்டதாக நினைத்த சக்தி, மர்மநபர்கள் அனுப்பிய போலி ஆன்லைன் டிரேடிங் லிங்கில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று பல்வேறு தவணைகளாக ரூ. 2 கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 357 முதலீடு செய்துள்ளார். அதன்மூலம் அவருக்கு ரூ. 11 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 702 லாபம் வந்துள்ளது.

Continues below advertisement

இதையடுத்து, அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, GST கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சக்தி அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை 

புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

எங்கே, எப்படி புகார் அளிப்பது?

இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:  

  • தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
  • புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
  •  மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
  • இணைய தளம்: www.cybercrime.gov.in 

விழிப்புணர்வே பாதுகாப்பு

ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.