வேலூரில் போலி மதுபான ஆலை: 4 பேரை கைது செய்து போலீசார் அதிரடி
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த காவனூர் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதனால் அங்கு கள்ள சந்தையில் மதுபான விற்பனை நடப்பதாக குடியாத்தம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கையில் பெரிய பையை வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கே.வி. குப்பம் அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஆலங்கனேரி பகுதியை சேர்ந்த விஜய் பிரகாஷ் என்பது தெரிய வந்தது.
விசாரணையில் இவர்கள் கே.வி.குப்பத்தில் இருந்து மேல்மயில் செல்லும் பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ் என்பவரிடமிருந்து மதுபான பாட்டில்கள் வாங்கி வந்தது தெரிய வந்தது. பின்னர் குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் ஜெயபிரகாஷ் வீட்டிற்குச் சென்று அவரை பிடித்து வீட்டை சோதனையிட்டனர்.
அப்போது ஜெயபிரகாஷ் வீட்டில் 16 மது பாட்டில்கள், 200-க்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்கள் மற்றும் மூடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராணுவ கேண்டீனில் விற்பனை செய்யும் மதுபாட்டிலில் ஒட்டப்படும் 300 ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்து ஜெயபிரகாஷை கைது செய்தனர். அதனை தொடர்ந்து ஸ்டிக்கர் அடித்துக் கொடுத்த கே.வி. குப்பம் பகுதியில் அச்சகம் வைத்துள்ள பாலமுருகன் என்பவரை கைது செய்து மதுவிலக்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ராணுவ கேண்டீனில் விற்பனை செய்யும் ஸ்டிக்கர்களை டிசைன் செய்து கொடுத்த வேலூர் பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவரையும் தேடி வருகின்றனர். வேலூர் பகுதியில் வீட்டில் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து நான்கு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.