சென்னையில் காதலனுக்காக பள்ளி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த ட்யூசன் ஆசிரியை, அவரது காதலன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 29 வயது ட்யூசன் ஆசிரியை ஒருவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் ட்யூசன் படித்து வந்தார். அதேசமயம் அந்த ஆசிரியைக்கு அவரது வீட்டுக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்த 38 வயதான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னிடம் ட்யூசன் படித்து வந்த சிறுமியுடன் பேட்மிட்டன் விளையாடிய ஆசிரியை, தனது காதலன் வீட்டில் இருக்கிறாரா என பார்த்து வருமாறு அச்சிறுமியிடம் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற அச்சிறுமியை ஆசிரியையின் காதலன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பின் அச்சிறுமியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியையின் உதவியை நாடியுள்ளார். மேலும் அச்சிறுமியுடன் ஒருநாள் மட்டும் இருப்பதற்கு ஏற்பாடு செய்தால் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் என அவரிடம் உத்தரவாதம் அளித்துள்ளார். ஏற்கனவே காதலனை திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த ட்யூசன் ஆசிரியை இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி திட்டம் ஒன்றை தீட்டி, ஒருநாள் சிறுமியின் தாயாரிடம் ப்ராஜெக்ட் வேலை இருப்பதால் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி பள்ளியில் விடப்பட்ட சிறுமியை அந்த ட்யூசன் ஆசிரியை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து சிறுமியை ட்யூசன் ஆசிரியையின் காதலன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் எனது சாவுக்கு நீதான் காரணம் எனக்கூறி தற்கொலை செய்துக் கொள்வேன் என ஆசிரியை சிறுமியை மிரட்டியுள்ளார்.
அதேபோல் வீட்டில் இருந்து பணம்,நகைகளை எடுத்து வர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பாலியல் வன்கொடுமை வீடியோவை உன் பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் எனவும் மிரட்டி ஏராளமான பணம், நகைகளை பெற்றுள்ளார். அவற்றை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து ட்யூசன் ஆசிரியை உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் ஒருகட்டத்தில் அச்சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ட்யூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலன் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நீதிபது எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. இதில் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் இருவருக்கும் ரூ.1.30 லட்சம் அபராதத்தோடு ஆயுள் தண்டனையும் விதித்தார்.
மேலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை விடுவிக்கும்படி தனியார் நிதி நிறுவனத்துக்கும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க தமிழக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்