சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், ரவுடியிசம் கொடி கட்டி பறந்து வந்தது. இதைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்த  கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.




வெள்ளத்துரையின் நியமனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை கலக்கிக் கொண்டிருந்த ரவுடிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. நினைத்ததைப் போலவே, அவரும் களத்தில் இறங்கி ரவுடிகளை விரட்டத் தொடங்கினர். படப்பை குணா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கு வலை வீசப்பட்ட நிலையில் குணா உள்ளிட்ட பலரும் அதில் பிடிபட்டனர். 




படப்பை குணாவை பிடிக்க பல்வேறு யூகங்கள் வகுக்கப்பட்டது. படப்பை குணா மீது எட்டு கொலை வழக்குகள் மட்டும் 9 கொலை முயற்சி வழக்கு உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குணாவை ஸ்கெட்ச் போட்டு பிடிக்க நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், பயந்து போன படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதால், படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியான போந்தூர் சிவா மற்றும் போந்தூர் சேட்டு ஆகிய இருவரை கைது செய்தனர். அதேபோல படப்பை குணாவின் ஆதரவாளராக இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தென்னரசு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக செங்கல்பட்டு , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் குறைவாகவே இருந்து வந்தது.



தனது முதன்மை டார்கெட் சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக விடாப்பிடியாக இருந்தார். போந்தூர் சிவா மற்றும் போன்ற சேட்டு ஆகிய இருவருக்கும் உறவினரான போந்தூர் மோகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்ய, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த பொழுது, சாமர்த்தியமாக போந்தூர் மோகன் தப்பி வந்தார்.  போந்தூர் மோகன் அந்தப் பகுதியில் குட்டி ரவுடியாக வலம் வந்தது மட்டுமில்லாமல், கட்டப்பஞ்சாயத்து, நிறுவனங்களை மிரட்டுவது,  என பல சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேபோல படப்பை குணா தப்பிப்பதற்கு உதவி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.





அதேபோல படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தேவையான உதவிகளை வெளியிலிருந்து செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் போந்தூர் மோகனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில், வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர், சட்டவிரோதமான பல்வேறு ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக, போந்தூர் மோகனை கைது செய்தனர். தற்போது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முன்னதாக  குணாவிற்கு உதவி செய்ததாக பல, காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரணடைந்த குணாவின் மீது,  குண்டர் தடுப்பு சட்டம் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் கம்பி எண்ணி வருகிறார் படப்பை குணா.