கோவை காந்திபுரம் பகுதியில் நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

கோவை நகரில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமான பணிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கோவை காந்திபுரம் பகுதியில் சில வடமாநில இளைஞர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நடு ரோட்டில் பெல்ட்டால் தாக்குதல்

Continues below advertisement

முதலில் வாய்த்தகராறாக தொடங்கிய இந்த வாக்குவாதம், பின்னர் மோதலாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள், தங்களது இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டுகளை கழற்றி மாறி மாறி தாக்கியதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும், சாலையில் சென்ற சில வாகன ஓட்டிகளும், அருகிலிருந்த உள்ளூர்வாசிகளும் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

நடு ரோட்டில் நடந்த இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த உள்ளூர்வாசிகள் தலையிட்டு, மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

போலீசார் விசாரணை 

இந்த மோதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள், அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வைரலான வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடு ரோட்டில் சட்டத்தை மீறி சண்டையில் ஈடுபட்டது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எதற்காக மோதல் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.