மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் பெண்களின் பிரச்னையை தீர்ப்பதாக கூறி அவர்களிடம் தவறாக நடந்த பிரபல ஜோதிடர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். 

Continues below advertisement

மகாராஷ்ட்ரா மாநிலம் சின்னர் தாலுகாவைச் சேர்ந்த அசோக் கராத் என்பவர் முன்னாள் கடற்படை ஊழியராக பணியாற்றியவர். பின்னர் இவர் மிர்காவ்னில் உள்ள ஸ்ரீ ஈஷானேஷ்வர் கோயில் அறக்கட்டளையின் தலைவராக இருந்தபோது எண் கணிதம் ஜோதிடம் படித்து பிரபல ஜோதிடராக மாறினார். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களைக் கவர்ந்ததன் மூலம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே சக்தி வாய்ந்த நபராக பார்க்கப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 35 வயதான திருமணமான பெண் ஒருவர் அசோக் கராத்தை குடும்ப பிரச்னையை தீர்ப்பதற்கான பரிகாரம் வேண்டி அணுகியுள்ளார். அவரிடம் சடங்குகள், மாந்திரீக முறைகள் மற்றும் தன்னிடம் தெய்வீக சக்திகள் இருப்பதாகக் கூறி அவரது நம்பிக்கையைப் பெற்று அசோக் கராத் ஏமாற்றியுள்ளார்.  கடந்த நவம்பர் 2022 முதல் டிசம்பர் 2025 வரை  உணவு மற்றும் தண்ணீரில் போதைப்பொருட்களைக் கலந்து அப்பெண்ணுக்கு மயக்கமடைய செய்துள்ளார். பின்னர் அவரை வசியப்படுத்தி   பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி கேட்டபோது மிரட்டியதால்  பாதிக்கப்பட்ட அப்பெண் காவல்துறையை அணுகவே மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Continues below advertisement

பாதிக்கப்பட்ட அந்த பெண் எதிர்த்து பேசினால் கணவருக்கு சூனியம் வைத்து விடுவேன், வீடியோக்களை வெளியிட்டு வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என அசோக் கராத் மிரட்டியுள்ளார்.  அப்பெண்ணின் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் கனடா கார்னரில் உள்ள “ஓக்ஸ் பிராப்பர்ட்டி டீலர் அண்ட் டெவலப்பர்” என்ற அசோக் கராத்தின் அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அங்கிருந்த மேஜை அறையில் 58 ஆபாசமான வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவ் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதில் பல முக்கிய பிரமுகர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

அதேசமயம் அசோக் கராத் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணுக்கு அவர் சடங்குகள் செய்வதும், அப்பெண்ணை திரும்பி நிற்க வைத்து விட்டு கிளாஸில் சிறுநீரை பிடித்து அதனை அப்பெண்ணை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தும் காட்சிகளும் உள்ளது. தொடர்ந்து அந்த பெண் மறுக்கும் நிலையில் அவருடன் உடல்ரீதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள அசோக் கராத் முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இந்த காட்சிகளின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணியை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசோக் கராத் 2022 நவம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மிர்காவ்ன் கோயிலுக்குச் சென்றபோது அவருடன் வலம் வந்தார். அதன்மூலம் மிகப்பெரிய அளவில் அசோக் கராத் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரிக்க மகாராஷ்டிர அரசு ஐபிஎஸ் அதிகாரி தேஜஸ்வினி சட்புடே தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.