நாகூர் வெட்டாட்டற்று கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட செல்வமணிக்கு சொந்தமான பைபர் படகுக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இதனால்,  ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் சேதம், வாழ்வாதாரம் பாதித்ததாக வேதனையுடன் தெரிவித்தார். இதுதொடர்பாக நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 


நாகை மாவட்டத்தில் 27 மீனவர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறு தொழில் எனப்படும் கரை பகுதிக்கு சென்று மீன் பிடி தொழிலில் பைபர் படகை பெரும்பாலான மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாகூர் அருகே பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் சைபர் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆற்றின் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட பைபர் படகு மற்றும் வலைகள் எரிந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகை நாகூர் மேல பட்டினச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகை நாகூர் வெட்டாற்றின் கரையோரத்தில் வழக்கம்போல நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செல்வமணியின் பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அப்போது அங்குள்ள வலைப்பின்னும் கூடத்தில் உறங்கி கொண்டிருந்த நபர்கள் படகு எரிந்து கொண்டிருந்ததை பார்த்து படகின் உரிமையாளர் செல்வமணிக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால், செல்வமணி வந்து பார்த்தபோது தீ படர்ந்து படகு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. பைபர் படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலை, 1 லட்சத்து 80 ரூபாய் மதிப்புள்ள பைபர் படகு எரிந்து நாசமானது.



 

மின் கம்பங்கள் இருந்தும் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் படகு நிறுத்துமிடம் கும்மிருட்டாக இருப்பதாகவும், இப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் இரவு நேரங்களில் மது அருந்தி வருகின்றனர். மின்சார வசதி ஏற்படுத்தி விளக்குகள் அமைத்துதர வேண்டும் என்றும், எரிந்த படகுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் படகை இழந்த பாதிக்கப்பட்ட மீனவர் செல்வமணி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். நாகை அடுத்த நாகூரில் வெட்டாற்று கரையோரத்தில் மீனவரின் படகு மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண