பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள மடாதிபதி மீதான குற்றப்பத்திரிகையில் போலீசார் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளனர்.


கர்நாடகாவின் சக்தி வாய்ந்த மடாதிபதி ஒருவர் மடத்தில் தங்கியிருந்த சிறுமிகளை போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


64 வயதான மடாதிபதியான அவர், மீது மடத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


மாணவிகள் இருவரும் மைசூரில் உள்ள அரசு சாரா நிறுவனத்தை அணுகியதை அடுத்து ஆகஸ்ட் 26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இரண்டு மாணவிகள் குற்றம் சாட்டினர்.


ஜூன்-ஜூலையில் புகார் அளிக்க மாணவிகள் மேற்கொண்ட முந்தைய முயற்சி தோல்வி அடைந்தது. மாணவிகள் புகார் அளிக்க வந்திருப்பது தொடர்பாக பெங்களூரு காவல்துறை, மடத்தின் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். மடத்தின் அலுவலர்கள் வந்து மாணவிகளை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மடாதிபதி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவின் சித்ரதுர்கா மற்றும் மைசூர் மாவட்டங்களில் பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டத்திற்குப் பிறகு  அவர் கைது செய்யப்பட்டார்.  கைது நடவடிக்கைக்கு முன்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மடத்தின் முன் கதவை அடைத்து பின் கதவு வழியாக அவரை வெளியே அழைத்துச் சென்றனர். அந்த அளவுக்கு அவருக்கு உள்ளூரில் மக்கள் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. 


குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, மாநில அரசியல் தலைவர்கள், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகின்றனர்.  


கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முன்னோடியும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ். எடியூரப்பா அவருக்குப் பகிரங்கமாகவே ஆதரவளித்தார். "தவறான வழக்கில் அவர் சிக்கியிருக்கிறார்" என அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மடாதிபதி சிறுமிகளுக்கு போதை மருந்தை கொடுத்து அவர்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் குற்றப்பத்திரிகையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் ஹாஸ்டல் வார்டன் மற்றும் இன்னொரு நபரையும் போலீசார் சேர்த்துள்ளனர். இவர்களைத் தவிர ஒரு மைனர் உள்ளிட்ட இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் ரீதியான ஆதாரங்களைத் தேடி வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுளனர்.