டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
விழுப்புரம் நகரில் நள்ளிரவு நேரத்தில் டீக்கடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, ஒரு கொலை முயற்சி சம்பவமாக மாறியுள்ளது.

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் நள்ளிரவு நேரத்தில் டீக்கடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, ஒரு கொலை முயற்சி சம்பவமாக மாறியுள்ளது. பிரபல ரவுடி ஒருவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ரவுடி தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி
விழுப்புரம் நகரில் நள்ளிரவு நேரத்தில் டீக்கடையில் ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, ஒரு கொலை முயற்சி சம்பவமாக மாறியுள்ளது. பிரபல ரவுடி ஒருவரின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கதிரவன் (40). 'மெண்டல் கதிர்' என்று அழைக்கப்படும் இவர் அப்பகுதியின் பிரபல ரவுடி ஆவார். நேற்று முன்தினம் நள்ளிரவு கதிரவன் மேல்தெரு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த விராட்டிகுப்பம்பாதையைச் சேர்ந்த மேகநாதன் (44) மற்றும் அன்பு (40) ஆகியோருக்கும், கதிரவனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. கதிரவன், அன்புவிடம் தேவையின்றி வம்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட மேகநாதனுக்கும் கதிரவனுக்கும் இடையே மோதல் முற்றியது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மேகநாதன் கதிரவனை கீழே தள்ளிவிட்டார். இருதரப்பினரும் அங்கிருந்த டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸ்களை எடுத்து ஒருவரை ஒருவர் தலையில் தாக்கி குத்திக் கொண்டனர். மோதலின் உச்சகட்டமாக, கதிரவன் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, மேகநாதன் அங்கிருந்த கனமான கிரைண்டர் குழவி கல்லை எடுத்து கதிரவனின் தலையில் போட்டு அவரைத் தீர்த்துக்கட்ட முயன்றுள்ளார்.
இந்தத் தாக்குதலில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கதிரவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தப்பியோடிய மேகநாதன் மற்றும் அன்பு ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.























