விழுப்புரம்: வளவனூர் அருகேயுள்ள ராம்பாக்கம் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் குடமுழக்கு விழாவிற்காக சீரியல் லைட் போட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் இராம்பாக்கம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை 26 ஆம் தேதி குடமுழக்கு விழா நடைபெறுகிறது. குடமுழக்கு விழாவினை முன்னிட்டு ராம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த ஹரிதரன் என்ற கல்லூரி மாணவர் அம்மன் சவுண்டு சர்வீஸ் மூலமாக சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கோவிலில் சீரியல் லைட்டுக்காக ஒயர் கட்டும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலையே மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் கல்லூரி மாணவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே கல்லூரி மாணவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோவில் குடமுழக்கு விழாவிற்கு சீரியல் லைட் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அருகே பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு கைலாசம் - வளர்மதி தம்பதியின் மகன் சக்தி சோமையா (14) 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜன.24) வகுப்பறையில் கம்ப்யூட்டரை ஆன் செய்ய ஆசிரியர் கூறியதாகவும் அதனால் மாணவன் இணைப்பு ஒயரை பிளக்கில் மாட்டிய போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் படுகாயமடைந்த மாணவனை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சாக்கோட்டை காவல் துறையினர் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.