மயிலாடுதுறை: நாடு முழுவதும் இன்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத் தூண்களான கைக்குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனப் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய தூய்மையான, பாதுகாப்பான இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்திலும் இன்று காலை 7 மணி முதல் பல்வேறு மையங்களில் விறுவிறுப்பாகச் சொட்டு மருந்து போடும் பணி தொடங்கியது. ஆனால், மாவட்டத்தின் மையப் பகுதியிலேயே ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும், பெற்றோர்களை அதிர்ச்சியில் உரைய வைக்கும் வகையிலும் ஒரு விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) பூங்கொடி மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாகப் போலியோ முகாமினைத் தொடங்கி வைத்தனர்.

Continues below advertisement

குடிமகன்கள் கூடாரத்தின் அருகே குழந்தைகளுக்கான முகாம்!

இதுவரை வழக்கமான ஒரு அரசு நிகழ்வாக நகர்ந்த இந்தச் சூழலில், அதற்குச் சற்று எதிரே சில மீட்டர் தொலைவில், அங்கிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மிக அருகாமையிலேயே மற்றொரு போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்ததுதான் தற்போதைய பெரும் சர்ச்சைக்குக் காரணமாக வெடித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே, இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தம் முழுவதும் சமூக விரோதிகளாலும், மதுப்பிரியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, 'குடிமகன்களின் கூடாரமாக' மாறிவிட்டதாகப் பொதுமக்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இடத்தை முறைப்படுத்தக் கோரி எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் விளைவாக, சமீபத்தில்தான் காவல்துறையினர் அங்கு வந்து எச்சரிக்கைப் பலகை ஒன்றையும் வைத்திருந்தனர்.

நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் ஒரு சூழலில், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைக்குரிய, ஆபாச வார்த்தைகளும் அசிங்கமான காட்சிகளும் நிறைந்த ஒரு டாஸ்மாக் மதுக்கடையின் அருகே, பச்சிளம் குழந்தைகளுக்கான சொட்டு மருந்து முகாமைக் கொண்டு போய் அமைத்திருப்பது எந்த வகையான நிர்வாகத் திறன் என்று பொதுமக்கள் கொந்தளித்துக் கேள்வி எழுப்புகின்றனர்.

அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயல்!

இதைவிடப் பெரும் கொடுமை என்னவென்றால், கூறைநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமினைத் தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் ஆகியோர், எவ்வித தயக்கமும் இன்றி, இந்தத் டாஸ்மாக் கடை அருகே அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கும் நேரில் சென்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்துள்ளனர்.

அரசு உயர் அதிகாரிகளும், மக்களின் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினரும் அந்த இடத்திற்குச் செல்லும்போது, அது மதுக்கடையின் அருகில் இருக்கிறது, குடிகாரர்கள் நடமாடும் பகுதி, கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பற்ற இடம் என்பது அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாகனங்களில் வந்து இறங்கும் அதிகார வர்க்கத்திற்கு, சாமானிய மக்களின் அவல நிலை எப்போதுமே உறைப்பதில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி எனச் சமூக ஆர்வலர்கள் காரசாரமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

முகத்தைச் சுளித்தபடி வந்த தாய்மார்கள் - கொதிக்கும் பொதுமக்கள்!

இன்று காலை முதலே தங்களது பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் சொட்டு மருந்து போட வந்த தாய்மார்கள், முகாம் அமைந்துள்ள இடத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். 

"எங்கள் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்காக அரசு சொட்டு மருந்து போடுகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதைக் கொண்டு வந்து ஒரு டாஸ்மாக் கடை வாசலில் வைப்பதா? மது குடித்துவிட்டு அநாகரிகமாகத் திரியும் நபர்களுக்கு மத்தியில், நாங்கள் எப்படிக் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்து வர முடியும்? பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற இந்த இடத்தில் முகாம் அமைக்க அனுமதி கொடுத்த அதிகாரி யார்?" என்று முகாமிற்கு வந்திருந்த தாய்மார்கள் புலம்பியவாறு சென்றனர்.

அதிகாரிகளின் உச்சக்கட்ட அலட்சியம்!

மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறையின் இந்த அப்பட்டமான அலட்சியப் போக்குதான் தற்போதைய ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் பிரதானக் காரணமாகக் பார்க்கப்படுகிறது. ஒரு பொது முகாம் அமைப்பதற்கு முன்பாக அந்த இடம் பாதுகாப்பானதா, பெண்களுக்கு உகந்ததா, சுகாதாரமான சூழல் நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய குறைந்தபட்சப் பொறுப்பு கூட அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும்.

மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகளான எம்.எல்.ஏ மற்றும் டி.ஆர்.ஓ ஆகியோர் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்குக் கூட இடத்தை சரியாகத் தேர்வு செய்யத் தெரியாத சுகாதாரத்துறையின் செயல்பாடுகள், தற்போது ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கே பெரும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டுச் சம்பந்தப்பட்ட அலட்சிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.