மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பள்ளி ஆசிரியர் ஒருவரே காரணம் என உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

தீக்குளித்த மாணவி

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியத்தை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அண்மையில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதியுள்ளார். இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு, மாணவி தனது வீட்டில் யாரும் எதிர்பாராத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தகவல் அறிந்த மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர்-1 உமல்பரிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவியிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.

Continues below advertisement

தஞ்சையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

முதலுதவிக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக, மாணவியின் பெற்றோர் மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரில், "வீட்டில் பாத்திரம் தேய்க்கச் சொன்னதால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி பூஜை அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு தீக்குளித்தார்" என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் 194 BNS (பாரதிய நியாய சன்ஹிதா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திடீர் திருப்பம்: ஆசிரியர் மீது பாலியல் புகார்

இன்று மாணவியின் உடல் உடற்கூறாய்வு முடிந்து கடலங்குடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கிராம மக்கள் ஒன்று திரண்டனர். மாணவி படித்த அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் (திருவிடைமருதூர் தாலுக்கா, மணக்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர்) என்பவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும் புதிய திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், கடலங்குடி மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள்

*மாணவியின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் கார்த்திகேயனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

* ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெற்றோர் அளித்த முதல் புகாரில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, உண்மையான காரணத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

டி.எஸ்.பி பேச்சுவார்த்தை - போக்குவரத்து பாதிப்பு

சாலை மறியல் போராட்டத்தால் அந்த வழியே சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி பாலாஜி தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டி.எஸ்.பி பாலாஜி கூறுகையில்:

"மாணவி ஏற்கனவே நீதித்துறை நடுவரிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்படும். ஆசிரியர் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த எங்களுக்கு போதிய அவகாசம் தேவை. குற்றச்சாட்டு ஊர்ஜிதமாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று உறுதி அளித்தார்.

காவல்துறையினரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் மயிலாடுதுறை - கடலங்குடி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தொடரும் விசாரணை

ஆரம்பத்தில் சாதாரண தற்கொலை முயற்சியாகப் பார்க்கப்பட்ட இந்த வழக்கு, தற்போது பாலியல் குற்றச்சாட்டு காரணமாகத் தீவிரமடைந்துள்ளது. மாணவி உயிரிழப்பதற்கு முன் அளித்த மரண வாக்குமூலத்தில் ஆசிரியர் குறித்து ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா என்பது குறித்தும், அவர் பயன்படுத்திய செல்போன் உரையாடல்கள் குறித்தும் சைபர் க்ரைம் போலீஸார் மூலம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மாணவியின் மரணம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)