மயிலாடுதுறை: தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவும், அதன் முக்கிய கூட்டணிக் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்து வந்த காங்கிரஸும் மாநில அளவில் இணக்கமாகச் செயல்பட்டு வந்த நிலையில், மயிலாடுதுறையில் இன்று அரங்கேறிய வன்முறைச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளைத் திமுகவினர் ஓட ஓட விரட்டித் தாக்கியதோடு, அக்கட்சியின் கொடிகளை நடுரோட்டில் போட்டுச் காலணியால் மிதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கவர்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்ற தவெகவினர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் சமீபத்தில் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் தனி பெரும்பான்மையுள்ள தவெகவை தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைக்காததால் அவரது செயல்பாடுகளைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது‌. அதன் ஒரு பகுதியாக, இன்று மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் அருகே ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக பொறுப்பு கவர்னருக்கு எதிராகக் கடுமையான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நிறைவடைந்தது.

Continues below advertisement

ஓட ஓட விரட்டப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டம் முடிந்து தொண்டர்கள் கலைந்து சென்ற நிலையில், மாவட்டத் தலைவர் பானுசேகர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் பேருந்து நிலையம் அருகிலேயே குழுவாக நின்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மருது மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் தலைமையில் திரண்டு திமுகவினர், அங்கு நின்று கொண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திடீரெனப் பாய்ந்து தாக்குதல் நடத்தினர். ஆபாசமான வார்த்தைகளால் திட்டியபடி, சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இந்தத் திடீர் தாக்குதலால் நிலைதடுமாறிய காங்கிரஸ் கட்சியினர் சாலையில் விழுத்து சிதறி ஓடினர்.

திமுகவினரின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானுசேகர், பொறுப்பாளர் ராஜா மற்றும் மணல்மேடு அன்பழகன் ஆகியோர் காயமடைந்தனர். குறிப்பாக, தாக்குதலின் போது நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜா என்பவரைத் திமுகவினர் காலால் எட்டி உதைத்ததில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.

கட்சி கொடிகள் அவமதிப்பு: காலால் மிதித்த திமுகவினர்

வன்முறையின் உச்சகட்டமாக, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிகளை திமுகவினர் பிடுங்கி எறிந்தனர். பின்னர், அந்தக் கொடிகளை நடுரோட்டில் வீசி எறிந்து, அவற்றைத் தங்கள் கால்களாலும் காலணிகலும் மிதித்துத் துவம்சம் செய்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அங்கேயே திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கட்சியின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்களை மட்டுமன்றி, அரசியல் நோக்கர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "கூட்டணிக் கட்சியாக இருந்த கட்சி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இப்படிப் பகிரங்கமாக ஒரு தேசியக் கட்சியின் கொடியை அவமதிப்பது முறையா?" என அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.