வாழ்வாதாரத்தை மீட்கப் போர்க்கொடி தூக்கும் சிறுதொழில் மீனவர்கள்.. கொந்தளிக்கும் பழையார்...
பிப்ரவரி 8-ம் தேதி மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து மீன்வளத்துறை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று வாழ்வாதாரப் போராட்டம் குறித்து மீனவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக திறன் கொண்ட இன்ஜின்களை (High-speed Engines) பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து வருவதாகக் கூறி, அப்பகுதி சிறுதொழில் மீனவர்கள் வரும் வரும் எட்டாம் தேதி மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சட்டவிரோத 'இன்ஜின்' வேட்டை: என்ன நடக்கிறது கடலில்?
பழையார் மீன்பிடித் துறைமுகத்தைச் சார்ந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகளும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக, கடல் வளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, தமிழக அரசு படகுகளின் இன்ஜின் குதிரைத்திறன் (Horsepower) மற்றும் வலைகளின் தன்மை குறித்துப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இருப்பினும், ஒரு சில விசைப்படகுகள் அரசின் விதிகளைத் துச்சமாக மதித்து, அதிவேக திறன் கொண்ட இன்ஜின்களைப் பொருத்தி கடலுக்குள் செல்கின்றன. இந்த அதிவேகப் படகுகள் மூலம் இழுவலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கும்போது, கடலின் தரைப்பகுதியில் உள்ள பவளப்பாறைகள், மீன்களின் இனப்பெருக்க மண்டலங்கள் மற்றும் முட்டைகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. இதனால் கடலோரப் பகுதிகளில் மீன் வளம் குறைந்து, பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கும் சிறுதொழில் மீனவர்கள் ஒரு வேளை உணவிற்கே வழியின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் 'மௌனம்' தரும் வலி
"இது ஏதோ இன்று நேற்று நடக்கும் பிரச்சினை அல்ல," என வேதனையுடன் கூறுகிறார்கள் பழையார் பகுதி மீனவர்கள். இது தொடர்பாகப் பலமுறை மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தும், இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.
மீனவர் பிரதிநிதிகள் முன்வைக்கும் முக்கியப் புகார்கள்
*பாராபட்சமான நடைமுறை: அண்டை மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் அதிவேக இன்ஜின்களுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டு, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் இத்தகைய படகுகள் தடையின்றி இயங்குவது எப்படி? என மீனவர்கள் கேள்வி எழுப்பி கின்றனர்.
* அதிகாரிகளின் அலட்சியம்: புகார் அளித்தாலும் அதிகாரிகள் பெயரளவிற்கு ஆய்வு நடத்துவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சட்டவிரோதப் படகுகளைப் பறிமுதல் செய்யவோ, உரிமத்தை ரத்து செய்யவோ முன்வருவதில்லை.
* சுற்றுச்சூழல் சீர்கேடு: அதிவேக இன்ஜின்கள் மூலம் ஒட்டுமொத்த மீன் கூட்டங்களையும் அள்ளிச் செல்வதால், எதிர்காலத்தில் இக்கடல் பகுதியில் மீன்களே இல்லாத வறண்ட நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக நாங்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தினோம், மனுக்கள் கொடுத்தோம். ஆனால், அதிகாரிகள் சட்டவிரோத மீன்பிடி தொழில் ஈடுபட்டுள்ள படகு உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. கடலே எங்கள் தாய், அவளை அழிப்பதைப் பார்த்துக் கொண்டு எங்களால் அமைதியாக இருக்க முடியாது," என ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 8: சீர்காழியில் முற்றுகைப் போராட்டம்
தொடர் புகார்களுக்குப் பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 8-ம் தேதி சீர்காழியில் அமைந்துள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பழையார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். "எங்கள் வாழ்வாதாரத்தை மீட்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது. அதிகாரிகள் இனியாவது உறக்கத்திலிருந்து விழித்து, தடை செய்யப்பட்ட படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதே அவர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது.























