தருமபுரி, ஹரூர் பகுதியில் ஸ்டெடியா மற்றும் நகை கடையின் பூட்டை உடைத்து சுமார் 2.50 கிலோ வெள்ளி நகைகள், கேமாரக்களை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள், அடுத்தடுத்து கடைகளில் கொள்ளை முயற்சி. கொள்ளையர்கள் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி.

 

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதி பஜாரில் நகைக்கடை, ஜவுளிக்கடை, தனியார் தங்க நகை கடன் வங்கிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் முகமூடி அணிந்து வந்த, கொள்ளையன், இரும்பு கம்பியால் நகைக் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதில்  ஞானவேல் என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் பூட்டை உடைத்து,  கடையில் இருந்த சுமார் ரூ.2 இலட்சம் மதிப்பிலான இரண்டரை கிலோ வெள்ளி கொலுசு, கொடி உள்ளிட்ட வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.




 

 

மேலும் லாக்கரை உடைக்க முயற்சித்த கொள்ளையன் லாக்கரை உடைக்க முடியாததால், வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு நகை கடைகளில் கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி விட்டு பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால், இரண்டு கடைகளில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தப்பின.

 



 

 

இந்த தகவலறிந்து வந்த காவல் துறையினர், அருகில் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் முகத்தில் முகக்கவசம் அணிந்து, தலையில் மங்கி குல்லா மற்றும் கைகளுக்கு கையுறை  உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ளை அடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 



 

 

தருமபுரி அடுத்த பழைய தருமபுரியில், ராகுல் என்பவர் போட்டோ ஸ்டுடியோ  நடத்தி வருகிறார். அவர் நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டுடியோவை பூட்டிவிட்டு, வீட்டு சென்றுள்ளார். தொடர்ந்து மீண்டும் இன்று காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது வீடியோ மற்றும் ஸ்டில் கேமரா, லென்ஸ் திருடி சென்றது தெரியவந்தது. 

 



 

 

பிறகு எதிரே உள்ள கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பைக்கில் வந்து, பைக்கை  நிறுத்திவிட்டு ,ஸ்டுடியோவில் உள்ள கேமராக்களை திருடிச்செல்வது பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சியை வைத்து ராகுல் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து  சிசிடிவியில் பதிவான காட்சிகளில் உள்ள மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து தருமபுரி, அரூர் பகுதினில் இரவு நேரங்களில் முகமுடி அணிந்து கொள்ளையர்கள், கடைகளின் பூட்டை உடைத்து திருடி செல்லும் சம்பவத்தால் தருமபுரி, அரூர் பகுதி வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.