குஜராத்தில் மனைவியை தனக்கு பிடிக்காததால் கணவர் செய்த கொடூரமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

இந்த சம்பவமானது குஜராத்தின் பனஸ்காந்தாவில் உள்ள பாலன்பூர் மேற்கு பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள கணேஷ்புராவைச் சேர்ந்த நிகேஷ் படேல் என்பவர் கடந்த மே 19ம் தேதி தனது மனைவி மர்மமான முறையில் காணாமல் போய்விட்டதாக பாலன்பூர் மேற்கு காவல் நிலையத்திற்கு வந்து புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. 

அம்மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிக்னேஷ் காமித்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் தெரிய வந்தது. அதாவது மனைவி தொடர்பான விவரங்களை சேகரிக்க தொடங்கியதில் இருந்து அவர் காணாமல் போனது வரை போலீசார் மிக தீவிரமாக விசாரணை செய்தனர். ஆனால் நிகேஷ் படேல்  கொடுத்த வாக்குமூலத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதனால் சந்தேகப் பார்வை நிகேஷ் படேல்  மீது திரும்பியது. 

Continues below advertisement

காவல்துறையினரின் தொடர்ச்சியான விசாரணையில் தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த அவர் கடைசியில் தப்பு செய்ததை ஒப்புக்கொண்டார். அதாவது தன் மனைவி மீதான வெறுப்பின் காரணமாக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இதற்காக ஒப்பந்தம் ஒன்றை போட்டதாக நிகேஷ் படேல் தெரிவித்ததைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

இதுதொடர்பான விவரங்களைக் கேட்டு உடனடியாக பாலன்பூர் மேற்கு போலீசார் துரித மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர். அதன்பின்னர் மனைவி இருக்குமிடம் அறிந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர். ஆனால் அந்த பெண் மிகுந்த மன அதிர்ச்சியில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிறிது ஆசுவாசத்திற்கு தனக்கு நடந்த கொடுமைகளை அப்பெண் அழுதுக்கொண்டே சொல்ல தொடங்கியுள்ளார். 

அதன்படி, தான் சிறை வைக்கப்பட்டிருந்த காலத்தில் தன்னை கடத்திய கும்பல் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கும், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாக்கியதாக அப்பெண் தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னிடம் உள்ள அனைத்து தங்க நகைகளையும் வலுக்கட்டாயமாகப் பறித்து விற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நிகேஷ் படேல், சஞ்சய் தாக்கோர், அசோக் தாக்கோர் மற்றும் சச்சின் தர்பார் உள்ளிட்ட 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. 

இதில் கணவர் நிகேஷ் படேல் தன் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். அந்த நண்பர்கள் குழு சுற்றுலா செல்லவுள்ளதாகவும் நீங்களும் வர வேண்டும் என வற்புறுத்தி அழைத்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரை வலுக்கட்டாயமாக சிறை வைத்திருக்கின்றனர்.  இந்த முழு சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான நிகேஷ் படேல் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தன் மனைவியை வெறுமனே பிடிக்காத காரணத்தால் இத்தகைய கொடூர செயலை அரங்கேறியது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.