ஒரகடம் அருகே போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வந்ததன் விளைவாக கடுமையான ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது .அதேபோல தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது . கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமையின் தளர்வில் கூட டாஸ்மார்க் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை . இதன் எதிரொலியாக மது குடிப்போர் மது கிடைக்காமல் கள் அல்லது கள்ளச்சாராயம் அல்லது போலி மது ஆகியவற்றை வாங்கி பருகுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் . தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  பலர் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற  வருகிறது.  போதைக்காக சிலர் சில சமயங்களில் ஆதாரமற்ற முயற்சிகளை மேற்கொண்டு அதனால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. 

 


 

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதனால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார். 

 


 

இந்நிலையில் நேற்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,சுரேஷ், கிருஷ்ணன் ஆகிய நபர்களுடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை பழம் சாறு பிழிந்து தின்னர் என்னும் ரசாயனத்தை குடித்து உள்ளனர். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் ஷங்கரின் நண்பர்களான கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.

 


 

இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே சுரேஷ் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


 

இதுகுறித்து அரசு மனநல மருத்துவரிடம் கேட்டபோது , ‛மது குடிப்போர் ஊரடங்கின் பொழுது மதுவைப் பற்றி நினைக்காமல் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்தல் மற்றும் தியானம் செய்தல் ஆகியவற்றை மூலமாக மதுவை மறப்பதற்கு இந்த ஊரடங்கை  பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் மனநல மருத்துவர்கள் மூலம் மது குடிப்போர் அதிலிருந்து மீள்வதற்கு வழி வழிமுறைகளை செல்போன் மூலமாக பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது,’’ என 

தெரிவித்தார்.


மேலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 7200953536 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மதுவிலிருந்து விடுபடம் வழிகளை கேட்டறியலாம். என்றும் தெரிவித்தார்.