மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆன்மிகத்தின் மீது கொண்ட அதிக நாட்டம் காரணமாக 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

இந்த சம்பவம் அங்குள்ள அதர்வா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு வசிக்கும் சத்ரபதி சிங் என்பவர் தனது வீட்டில் நடைபெறும் பூஜைக்காக பக்கத்து வீட்டில் வசிக்கும் பூல் குமாரி சிங் மற்றும் கெம்லா சிங் என்ற தம்பதியினரை அழைத்துள்ளார். பூஜைக்காக தனது வீட்டின் வாசல் பகுதியில் ஒரு மண் மேடை ஒன்றை சத்ரபதி சிங் உருவாக்கினார். தொடர்ந்து நேற்று காலை பூஜைக்காக அண்டை வீட்டார் தம்பதியினர் இருவரும் வந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருவரையும் சத்ரபதி கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால்  பூல் குமாரி சிங் மற்றும் கெம்லா சிங் ஆகிய இருவரையும் தலை துண்டித்து சத்ரபதி சிங் கொலை செய்தார். அவர்கள் தாக்கப்படும்போது எழுந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்த சுமித்ரா சிங் மற்றும் ரம்பஜன் சிங் ஆகிய இரண்டு பேர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

Continues below advertisement

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சத்ரபதி சிங்கை கைது செய்து விசாரணை நடத்தினர். அதுமட்டுமல்லாமல் அவர் வீட்டில் நடத்திய விசாரணையில் சூனியம் போன்ற சடங்குகளுக்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சத்ரபதி சிங்கும், இந்த நிகழ்வில் கொலை செய்யப்பட்டவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் ஆகியோர் உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. 

மேலும் முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் சத்ரபதி சிங் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அவர் ஜோதிடம் பார்த்தபோது அதில் இது தெய்வத்தின் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனவும், அதனை சரி செய்ய ஒரு சடங்கு செய்து நரபலி கொடுக்க வேண்டும் என சொன்னதாகவும் தெரிய வந்தது. அதனை நம்பிய சத்ரபதி சிங் திட்டமிட்டபடி பூல் குமாரி சிங் மற்றும் கெம்லா சிங் ஆகியோரை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தடயவியல் குழுவால் மீட்கப்பட்ட ஒரு தேங்காய் மற்றும் பிற பூஜை பொருட்கள் ஆகியவை சோதனைக்கு உட்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சத்ரபதி சிங் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் அவரது சமீபகால  நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.