மனைவிக்கு பதில் மாமியார்.. குடிபோதையில் மருமகன் செய்த கொடூர செயல்..
மருமகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை கடுமையாக துன்புறுத்தி வந்துள்ளார். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் மருமகன் திருந்தவில்லை. இந்த நிலையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான்.

தெலங்கானா மாநிலத்தில் குடிபோதையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் அம்மாநிலத்தில் உள்ள நாகர்கர்னூல் மாவட்டத்தில் தான் நடைபெற்றுள்ளது. அங்கிருக்கும் கல்வகுர்த்தி மண்டலம் ரகுபதிபேட்டை கிராமத்தில் 60 வயது பெண்மணி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளை திம்மாஜிபேட்டை மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்துக் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின் மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றுள்ளது.
ஆனால் ஒரு கட்டத்தில் மருமகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை கடுமையாக துன்புறுத்தி வந்துள்ளார். மகளை திருமணம் செய்துக் கொடுத்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த 60 வயது பெண்மணி தவித்துள்ளார். இதற்கிடையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் மருமகன் திருந்தவில்லை. மீண்டும் மீண்டும் தம்பதியினர் இடையே பிரச்னை வெடிக்க, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண்மணி, மகள், மருமகனை தன்னுடன் வந்து தங்கி கொள்ளுமாறு அழைத்து வந்துள்ளார்.
அதன்பிறகும் மருமகன் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை. சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் சண்டை ஏற்பட, மகள் உறவினர் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்த நிலையில் சம்பவம் நடந்த நாளில் வீட்டில் அந்த 60 வயது பெண்மணி மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் குடிபோதையில் வந்த மருமகன், சற்றும் எதிர்பாராத வகையில் அந்த பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை தடுக்க நினைத்த அவரை கொடூரமாக கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதேசமயம் இரண்டாவது மகள் காவல்துறையில் புகாரளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தியாவில் போதைப் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மது, புகையிலை போன்ற போதைப் பொருட்களால் இளம் வயதினர் வாழ்க்கை சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளம் வயதிலேயே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.























