மதுரையில் சிறையில் உள்ள கவாத்து திருப்பதியின் ஆதரவாளர்களை கொலை செய்யும் நோக்கில் வாளுடன் சுற்றித் திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமூகவலைதளங்கள் மூலமாகவும் இரு தரப்பினரும் வெளிப்படுத்தி வருகின்றனர்
 
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த பிள்ளையார் கணேசன் மற்றும் கவாத்து திருப்பதி ஆகியோர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிள்ளையார் கணேசன் உயிரிழந்தார். இதனையடுத்து கவாத்து திருப்பதியும் முந்தைய வழக்கு ஒன்றில் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிள்ளையார் கணேசன் உயிரிழந்த நிலையிலும் அவரது ஆதரவாளர்களுக்கும், கவாத்து திருப்பதி ஆதரவாளர்களிடையே தொடர்ந்து மோதல்போக்கு இருந்துவருகிறது. இதனை சமூகவலைதளங்கள் மூலமாகவும் இரு தரப்பினரும் வெளிப்படுத்தி வருகின்றனர். 
 
தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி
 
இது போன்று புதிய கோஷ்டி மோதலை தடுப்பதற்காக இரு தரப்பில் உள்ள ஆதரவாளர்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய எல்கை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி மதுரை  ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுரை சுந்தராஜாபுரம் மார்கெட் அருகே 4 இளைஞர்கள் அடங்கிய கும்பல் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்ததை பார்த்த பின்னர் நால்வரையும்  பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
 
4 பேர் கைது
 
அப்போது அவர்கள் பெரிய அளவிலான வாள்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது நால்வரும் பிள்ளையார் கணேசனின் ஆதரவாளர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கவாத்து திருப்பதியின் ஆதரவாளர்களை கொலை செய்தால் ஏரியாவில் பெரிய ஆள் ஆகலாம் என்பதற்காக கொலைக்கு திட்டமிட்டு வாளுடன் காத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வாளுடன் கொலை செய்வதற்காக சுற்றி திரிந்த விஜய் - குட்ட விஜய்(27) , ஜாகீர் உசேன்(23) அழகேசன்(36) பிரவின் பாலா( 26) ஆகிய நால்வரையும் கைது செய்த ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் அவர்களிடமிருந்து வாள்களை பறிமுதல் செய்தனர. பின்னர் 4 பேரையும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
மதுரையில் சிறையில் உள்ள கவாத்து திருப்பதியின் ஆதரவாளர்களை கொலை செய்யும் நோக்கில் வாளுடன் சுற்றிதிரிந்த 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.