கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்னை வருவது வழக்கம். அந்த பிரச்னைகள் சில நேரத்தில் முற்றி கொலை வரும் செல்லும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகிறது. அந்தவகையில் தற்போது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை கொலை செய்து கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் குல்வந்த் சிங் (50). இவருக்கும் புஷ்பா சிங்(38) என்பவருக்கும் இடையே திருமணம் நடந்து இரண்டு ஆண் குழந்தைகள் இருந்துள்ளன. குல்வந்த் சிங் கட்டடம் தொடர்பான தொழிலை செய்து வருகிறார். கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.


இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் கணவர்-மனைவி இடையே சண்டை அதிகமாகியுள்ளதாக தெரிகிறது. அந்தச் சண்டை முற்றிய போது புஷ்பா சிங்கை அவருடைய கணவர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் குல்வந்த் சிங் தற்கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய இவர்களது மகன் தாய் மற்றும் தந்தை சடலமாக இருப்பதை பார்த்துள்ளார். அதன்பின்னர் அந்தச் சிறுவன் தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு இருந்த சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


அங்கு இருந்த குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மனைவி புஷ்பா சிங் நீண்ட நேரம் தன்னுடைய நண்பருடன் தொலைபேசியில் பேசுவது கணவர் குல்வந்த் சிங்கிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  நண்பருடன் நீண்ட நேரம் மனைவி தொலைபேசியில் பேசியதால் அவரை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்கொலைக்கான காரணங்கள் : 


தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 


மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050