சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் காதலனும், காதலியும் தங்களின் செல்போன்களை திருமணத்திற்கு முன்பு மாற்றிக் கொள்வார்கள். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களால் ஏற்படும் பாதிப்பை சுட்டிக்காட்டும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கும். இந்த படத்தின் தாக்கம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை ஒருவரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டுவிட்டது. 


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (23). இவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்நிலையில் லவ் டுடே திரைப்பட பாணியில் அரவிந்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அரவிந்தின் செல்போனை அலசி ஆராய்ந்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார். அரவிந்த்தின் வீடியோக்களை பார்த்த போது 10 ஆம் வகுப்பு மாணவியின் அரை நிர்வாண வீடியோவை மற்றொரு முனையில் அரவிந்த் பார்ப்பது போன்று ஒரு வீடியோ இருந்துள்ளது. இது குறித்து நிச்சயிக்கப்பட்ட பெண் விசாரிக்க தொடங்கினார். அப்போது தான் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிதாக கணக்கு தொடங்கிய அவர் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை அரவிந்த் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி பழகியதும், அவரின் செல்போன் எண்ணை பெற்று தொடர்ந்து பேசிய வந்ததும் தெரியவந்தது. அரவிந்த்தின் பேச்சில் மாணவியும் மயங்கியுள்ளார். 



ஒரு கட்டத்தில் வீடியோ காலில் அரவிந்த் அந்த மாணவியுடன் பேசியுள்ளார். அப்போது அந்த மாணவியை அரை நிர்வாணமாக பார்க்க ஆசைப்படுவதாக கூறி‌ அரவிந்த் வற்புறுத்தியுள்ளார். அப்போது வீடியோ பதிவு செய்யமாட்டார் என்று நம்பி அந்த மாணவியும் அரை நிர்வாணமாக இருக்க அந்த மாணவிக்கு தெரியாமல் அரவிந்த் வீடியோவாக பதிவு செய்த காட்சியை தான் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் பார்த்து உள்ளார். உடனே அவர் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மேலும் கைதான அரவிந்திடம் இது போன்று வேறு பெண்களின் நிர்வாண வீடியோவை பதிவு செய்து உள்ளாரா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வெளியான தகவல் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லவ்டுடே திரைப்பட பாணியில் செல்போனை மாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைதாகி சிறை சென்ற இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து வாழப்பாடி டி.எஸ்.பி., ஹரி சங்கரி கூறும்போது, படிக்கும் மாணவ-மாணவிகள் செல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி செல்போன் பயன்படுத்தும் மாணவ மாணவிகள் என்ன செய்கிறார்கள் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.