பாலியல் பலாத்காரம் செய்தவருக்கே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துவைப்பது நிச்சயமாக பெண்ணுக்கு இழைக்கப்படும் இன்னொரு அநீதி என்றே கூறவேண்டும். ஆனால், தமிழகக் கிராமங்களில் ஏன் இந்தியக் கிராமங்கள் பலவற்றிலும் இன்றளவும் கூட, இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன.




கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மேட்டப்பள்ளி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவத்தின் பின்னணி இதுதான். சிங்காரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரை அதே ஊரைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துவந்திருக்கிறார். இதனால் பெண் கர்ப்பமடைய. தாயார் போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் 70% மனநல பாதிப்பு கொண்டவரும் கூட. காவல்நிலையத்தில் புகாரளிக்க பெண்ணின் தாயார் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கான உரிமைகள் நல கூட்டமைப்பு TARATDAC (Tamil Nadu Association for the Rights of the Differently abled and their Caregivers) உதவியைப் பெற்றிருக்கிறார்.
அதன்படி போலீஸில் புகாரும் தெரிவிக்கப்பட்டாகிவிட்டது. ஆனால், விஷயம் ஊர் பஞ்சாயத்துக்கும் எட்டியிருக்கிறது. அப்புறம் என்ன பஞ்சாயத்து தலைவி சின்னத்தாயி நஞ்சப்பன், ஊத்தங்கரை டிஎஸ்பி அலுவலகத்திலேயே வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிரார். இரண்டு நாட்கள் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தும் நடந்திருக்கிறது.




முதல் நாளில் டிஎஸ்பியும் இருந்துள்ளார். இரண்டாவது நாளில் இரண்டு ஆய்வாளர்கள் இருந்துள்ளனர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியபோது, குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவியும் உறவினர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு திருமணம் செய்துவைத்து அழைத்துச் செல்வதாகக் கூறினர். இதற்கு பெண்ணின் தாயாரும் ஒப்புக்கொள்ள இப்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், ஒரு பாலியல் பலாத்கார குற்ற வழக்கை எப்படி கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்க்கலாம் என TARATDAC கேள்வி எழுப்பியிருக்கிறது. அதுவும் டிஎஸ்பி அலுவலகத்திலேயே இப்படி ஒரு கட்டப்பஞ்சாயத்தை நடத்தலாமா என்றும் வினவியுள்ளது.
சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் 417 (ஏமாற்றுதல்) 493 (ஏமாற்றி வாழ்தல்), 503(1) கிரிமினல் குற்றம், 506 (1) மிரட்டல், 312 (கட்டாய கருக்கலைப்பு) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டே பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே மாற்றுதிறனாளிகள் கூட்டமைப்பின் முக்கிய புகாராக இருக்கிறது.இது குறித்து அதன் மாநிலத் தலைவர் எஸ்.நம்புராஜன் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் எப்படி உறவுக்கு இசைவு தெரிவித்திருப்பார். ஆகையால் இங்கே பலாத்காரம் என்பது திட்டமிட்டே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றார்.
இவையெல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 
இந்த வழக்கில் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு மனுவும் அளிக்கப்பட்டிருக்கிறது. வழக்குபோகும் திசையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.