கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிய விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




 


கரூர் மாவட்டம் வேட்டமங்களத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலணியை சார்ந்தவர் பழனிச்சாமி. இவர், நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இரவு பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிலிருந்து சாலையை கடந்து வீடு திரும்பிய போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.


 




 


இதில் பழனிச்சாமி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனிச்சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.