தோகைமலை அருகே விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி கம்பலிநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 2-வது மகள் பரிமளா (வயது 17). இவர் கீழ்வெளியூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 28-ந் தேதி தோட்டத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.




இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிமளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் தோகமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




தரகம்பட்டி அருகே குடும்ப தகராறில் கணவரை கத்திரிக்கோலால் குத்திய மனைவி


தரகம்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவி தனது கணவரை கத்தரிக்கோலால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருத்தரியன் (வயது 40). இவரது மனைவி உமாபதி. இந்த தம்பதிக்கு இடையே கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு உமாபதி அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 




இதனால் மனைவியை அழைத்து வருவதற்காக கருத்தரியன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உமாபதி அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து கருத்தறியனின் தோள்பட்டை மற்றும் கைகளில் குத்தியுள்ளார்.




இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருத்தரியன் கொடுத்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.