காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏகாம்பர நாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன்பெருமான் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை,  ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி  உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

 



 

பங்குனி உத்திர திருவிழா

 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ திருகல்யாண திருவிழா நடப்பது வழக்கம்.பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மன் பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.  அதிகார நந்தி வாகனம் , 63 நாயன்மார்கள் புறப்பாடு உற்சவமும், வெள்ளித் தேர் உற்சவம், கோவிலின் வரலாற்றை விளக்கும்  மாவடி சேவை உற்சவம்,  பங்குனி மாத திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.  அதேபோல விநாயகர்,  முருகர், சண்டீஸ்வரர் ஆகிய சாமி புறப்பாடு ஊர்வலம் நடைபெறும்.

 



இவ்வாறு நடைபெறும் ஊர்வலங்களுக்கு பல உபயதாரர்கள் தங்கள் பங்களிப்பை அளிப்பது வழக்கம். அவ்வாறு தங்கள் பங்களிப்பை கொடுக்கும் உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அதிக அளவு மரியாதை தருவதும், பக்தர்களுக்கு மரியாதை தராமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த  வண்ணம் இருந்தன. இந்நிலையில் பக்தர்கள் கொடுக்கும் உண்டியல் பணம் மூலமாக  உற்சபமூர்த்திக்கு செலவு செய்யப்படுவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்துள்ளது.

 

லட்சக்கணக்கில் செலவு

 

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2018 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் , 34 லட்சத்து 45 ஆயிரத்து 75 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு  33 லட்சத்து 86 ஆயிரத்து 58 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் 2021 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் 38 லட்சத்து 70 ஆயிரத்து 900 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உபயதாரர்கள் , சில செலவுகளை ஏற்றுக் கொண்ட பின்பும் அதற்கு சேர்த்து செலவு செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டுகிறார் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை பெற்ற லில்லி பாபு.

 



 

இதுகுறித்து காஞ்சிபுரம் பகுதியை டில்லி பாபு நம்மிடம் தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்ட பொழுது முதலில் பதில் அளிக்கவில்லை, இது தொடர்பாக தமிழ்நாடு தகவல் ஆணையம் அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்ட பின்பு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆணையர், இந்த தகவல் அவர்களுக்கு தரப்பட வேண்டும், மேலும்  அவற்றைப் பார்வையிடவும் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன் பெயரில் கோவிலில் உள்ள கோப்புகளை பார்க்கும் பொழுது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிந்தது. 



 

இத்தனை நாட்களாக பிரம்மோற்சவம் நாட்களில் உபயதாரர்கள் தான் செலவு செய்வதாக சொல்லிக் கொண்டு வந்தார்கள். ஆனால் கோவிலில் இருந்து இவ்வளவு செலவு என கணக்கு காட்டி இருக்கிறார்கள். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக சந்தேகிக்கிறோம். காவல்துறை, தீயணைப்பு துறை என பல அரசு துறைகளுக்கு செலவு செய்ததாக கணக்கு காட்டி இருக்கிறார்கள். இருப்பதிலேயே கோவில்களுக்கு தான் அரசு அதிக வரி பணத்தை பெறுகிறது. அப்படி இருக்க அரசு துறைக்கு ஏன் கோவில் சார்பில் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்.

 

கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்த கோவில்

 

மேல்கொடி அர்ச்சகருக்கு 56 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். சேவையாக செய்யப்படும் வேலைக்கு 56 ஆயிரம் ரூபாய் என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. எந்தக் கோவிலிலும் மேல்கொடை பிடிக்கும் அச்சகருக்கு 56000 ரூபாய் கொடுப்பார்களா என தெரியவில்லை. அதேபோல தயிரை 11 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். அரிசி 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். இதுபோக மல்லிகை சாமான் பொருட்கள் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். இது இல்லாமல் காவல்துறை மின்சாரம் தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசுத்துறை பணியாளர்களுக்கு 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு காட்டி இருக்கிறார்கள். சாமிக்கு வஸ்திரம் வாங்கியது 70 ஆயிரம் ரூபாய் என கணக்கு காட்டியுள்ளார்கள், கோவிலில் ஏற்கனவே வஸ்திரம் இருக்கிறது, ஆனால் ஏன் வாங்கினார்கள் என தெரியவில்லை.

 



இதற்கு ரசீதுகள் இருக்கிறதா என்று கேட்டால் செயல் அலுவலர்கள் இல்லை என கூறுகிறார்கள். தீயணைப்பு துறை அலுவலகம் கட்டியது என 46 ரூபாய் செலவு காட்டி இருக்கிறார்கள், சிறியதாக கட்டப்படும் இந்த அலுவலகத்திற்கு எப்படி இவ்வளவு செலவானது என தெரியவில்லை. இது போக பிரசாதம் என்ற பெயரில் 80 ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டி இருக்கிறார்கள். விஐபிகளுக்கு தேங்காய் பழம் வாங்கி கொடுத்தது என்ற கணக்கில் ஒரு 12 ஆயிரம் ரூபாய் எழுதி உள்ளார்கள். இது போன்ற பல முறைகேடுகள் மற்றும் பல பொய்யான தகவல்கள், பொய்கணக்கு எழுதியுள்ளதாக தெரிகிறது. பல ஊழல்கள் நடந்துள்ளது இதிலிருந்து தெரிய வந்திருக்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது டில்லிபாபுவின் கோரிக்கையாக உள்ளது. 

 



காஞ்சிபுரம் ஏகநாதர் கோவில் சோமாஸ்கந்தர்  சிலை செய்ததில் சுமார் 100 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த தகவல் அறிவி உரிமை சட்டம் பெறப்பட்ட பதில்கள், பக்தர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது