குமரி மாவட்டத்தில் கேலி கிண்டலைதட்டி கேட்ட பெண்ணை மின்கம்பத்தில் கட்டி போட்டு தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 


குமரி மாவட்டம் மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் கலா (35), கணவரை இழந்த இவர் தனது 9 வயது மகளுடன் தனித்து வாழந்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவர் வேலைக்கு செல்வதால் வீட்டில் அவரது மகள் தனியாக இருந்து வந்துள்ளார். மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அவரை காப்பகத்தில் சேர்த்துள்ளார். அங்கிருந்தே கலாவின் மகள் படித்து வந்துள்ளார்.


கலா நடத்தும் மசாஜ் செண்டருக்கு தினசரி காலை மேல்புறம் வழியாகத்தான் செல்வார். அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த கிண்டல் கேலி தாகாத வார்த்தைகளாக மாறியுள்ளது. இதனால் அச்சமடைந்த கலா தனது பாதுகாப்பிற்காக கத்தி மற்றும் மிளகாய் பொடியை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.


தினமும் காலையில் மசாஜ் செண்டருக்கு செல்வது போலவே  நேற்றும் சென்றுள்ளார். நேற்றைய தினம் அவர் அந்த வழியாக செல்லும் போது ஆட்டோ ஒட்டுநர்கள் தகாத வார்த்தையில் பேசி கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கலா தன்னிடம் இருந்த மிளகாய் தூளை அவர் மீது எரிந்து தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் அதனை தடுத்து, கலாவை கூட்டாக பிடித்துள்ளனர். அவரை பலவந்தமாக பிடித்து கை கால்களை துணியால் கட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.


சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்கம்பத்திலேயே கட்டி வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அருமனை போலீசார் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கலா அவருக்கு நேர்ந்த சம்பவங்களை குறித்து போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்று மூன்று ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று ஒரு பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.