பரபரப்புக்கு பஞ்சமில்லாத கருவூரில் தற்போது பரபரப்பு சம்பவம் நடந்ததை விரிவாகக் காணலாம். பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகள் ஜோதி முருகேஸ்வரி நேற்று முன்தினம் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை பெற்ற அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் புகாரை படித்துப் பார்த்த உடன் அவருக்கு தலையே சுற்றிவிட்டது.


என்ன புகார் என்று விரிவாக பார்த்தபோது. அந்த ஜோதி முருகேஸ்வரி கைப்பட எழுதிய புகார் கடிதத்தில் தனக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அன்று கரூர் மாவட்டம், வெங்கமேடு விவிஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்ரமணியன் என்பவருக்கும் எனக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நாங்கள் இல்லற வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.




புகார் கொடுத்த முதல் மனைவி ஜோதி முருகேஸ்வரியிடன் பாலசுப்ரமணி புகைப்படம்


மேலும், கடந்த 2013-ஆம் ஆண்டு எங்கள் வாழ்வில் புதிய வரவாக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மகிழ்ச்சியுடன் இருந்த நான் எனக்கு கடவுள் கொடுத்த மகிழ்ச்சி 3 மாதம் மட்டுமே . அதைத் தொடர்ந்து தான் எனது வாழ்வில் பேரிடி ஒன்று விழுந்தது . நான் எனது கைக்குழந்தையுடன் எனது மாமனார் இல்லமான வெங்கமேடு விவிஜி நகர் பகுதிக்கு மூன்று மாதம் கழித்து சென்றேன். பின்னர் அங்கு எனது கணவர் நித்தியா என்ற பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தேன். இதனை நான் எனது கணவரிடம் மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டபோது, ‘அவன் அப்படித்தான் இருப்பான் என்று சொல்லி என்னை அடித்தும் துன்புறுத்தினர். பின்னர் நான் அங்கிருந்து எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். 




இரண்டாவது திருமணம் செய்த நித்தியா என்ற பெண்ணுடன் பாலசுப்பிரமணி


அதன்பின்பு, எனக்கு தெரியாமலும், என்னிடம் விவாகரத்து பெறாமலும் ,எனது கணவர் பாலசுப்பிரமணி அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் கடந்த 2017 நவம்பர் மாதத்தில் நித்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் எனது காதுக்கு எட்டியது அது என்னவென்றால் என்னையும், 2-வது திருமணம் செய்த நித்தியாவையும், ஏமாற்றி மூன்றாவதாக சுதா என்ற பெண்ணை கடந்த 2020 ஜனவரி மாதம் 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததன் பேரில், நான் இதற்கு மேலும் மெளனம் சாதித்தால் இன்னும் பல்வேறு பெண்கள் வாழ்க்கையை எனது கணவர் சூறையாடுவது நிச்சயம் என தெரிந்து, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். என பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஜோதி முருகேஸ்வரி தகவல் அளித்தார்.




மூன்றாவது திருமணம்


இந்த தலைசுற்றும் சம்பவத்தில் மனுவைப் பார்த்த அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி வெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் வசித்துவரும் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நித்யா ஆகியோர் பிடிபட்டனர். நேற்று இரவு அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கரூர் அருகே ஒருவர் பின் ஒருவராக பெற்றோர், சம்மதத்துடன் 3 திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.