கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னை லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப் படை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 28 வயதான பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். விளையாட்டின் போது காயமடைந்த அவர், தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில்அமிர்தேஷ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர்.




இதையடுத்து நீதிமன்றத்தில் அமிர்தேஷ் ஆஜர்படுத்தப்பட்ட போது, விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். கோவை காவல் துறையினர் பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், நீதிமன்ற காவலில் லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைக்கப்பட்டார். கடந்த 27 ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதனிடையே அமிர்தேஷை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதேபோல அமிர்தேஷ் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 30 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதனையடுத்து அமிர்தேஷ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.




இதனிடையே விமான லெப்டினன்ட் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் விமானப்படை அதிகாரி தனது புகாரில் கூறிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தன்னுடைய பெயரும் குடும்பத்தின் பெயரும் வெளிவராமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். ஆனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் தனது வழக்கை ஊடகங்களுக்கு கசிய விடுவதாக விமானப்படை அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகவும், வழக்கு இருந்தால் அதிகாரிகளிடமிருந்து எந்த ஆதரவும் வழங்கப்படாது என்றும் கூறியுள்ளார். மேலும் சிவில் காவல் துறையுடன் புகாரில் அதிகாரிகள் ஒருமித்த கருத்தோடு எழுதி கொடுக்கவும், புகார் செய்ய எந்த அதிகாரியும் இல்லை என்று அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.


விமானப்படை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையின் போது, ​​இரண்டு விரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு,  கடந்த கால பாலியல் வரலாறு பற்றி கேட்டார் என்றும் கூறியுள்ளார். பாலியல் வழக்குகளில் இரண்டு விரல் பரிசோதனை மேற்கொள்வது என்பது ஆதாரங்களை அழிக்க பார்ப்பதற்கு சமம் எனவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகள் செப்டம்பர் 20 வரை கூட சோதனைக்கு அனுப்பப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பிரச்சினையில் புகார் அளிப்பதில் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பலரிடம் தெரிவித்ததை நான் கேள்விப்பட்டேன் எனவும், புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்வதாக நம்பிக்கை இல்லாத பட்சத்தில் கோவை மாநகர போலிசாரிடம் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.