Crime: உலக்கையாலே அடித்துக் கொலை! மனைவியை கொன்று தற்கொலை செய்த கணவன் - தென்காசியில் சோகம்

தென்காசி அருகே மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவன், அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தென்காசி மாவட்டம் கீழத்திருவேங்கடம் தெற்கு பாறைப்பட்டியை  சேர்ந்தவர் கருப்பசாமி (72). இவரது மனைவி சீதாலட்சுமி (65). இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் சீதாலெட்சுமி மட்டும் தனியாக ஊரில் வசித்து வருகிறார். கணவர் கருப்பசாமி திருவேங்கடம் பகுதியில் கொத்தனாராக இதற்கு முன் வேலை பார்த்து வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சென்னையில்  வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அதோடு ஆறு  மாதத்திற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தற்போது ஊருக்கு வந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

உலக்கையால் அடித்துக் கொலை:

குறிப்பாக தனக்கு பிடிக்காத அக்கம் பக்கத்து உறவினர்களிடம் பேச கூடாது என கருப்பசாமி கூறி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. அதில் இருவருக்கும் பிரச்சினை முற்றவே ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து மனைவி சீதாலெட்சுமி மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சீதாலெட்சுமி நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தற்கொலை:

கோபத்தில் சற்றும் யோசிக்காமல்  மனைவியை கொலை செய்த கருப்பசாமி, அதன்பின்னர் தாயை கொலை செய்தது மகன்களுக்கு தெரிந்தால்  சும்மா விடமாட்டார்கள் என்ற பயத்தில் தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரவில் இச்சம்பவம் நடந்தது யாருக்கும் தெரியாத நிலையில் காலையில் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் இது குறித்து திருவேங்கடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதோடு அருகில் உள்ள மக்கள் அனைவரும் கருப்பசாமியின் வீட்டின் முன் குவிந்தனர். தொடர்ந்து அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கருப்பசாமியை மீட்ட காவல்துறையினர்  சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பசாமி சுய நினைவை இழந்து வருவதாக தெரிவித்த சற்று நேரத்தில் அவர் உயிரிழந்தார். 

மேலும் இறந்த சீதாலெட்சுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். கோபத்தில் மனைவியை கொலை செய்து விட்டு பின் மகன்கள் மீது உள்ள பயத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola