பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பார்கள்.அது யார் விஷயத்தில் உண்மையோ வடமேற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வாழ்க்கையில் அது நிஜமாகியுள்ளது. இங்கிலாந்தின் லான்காஷைர் பகுதியில் 2010ம் ஆண்டு தொடங்கி தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ரூத் ஃபோர்ட். 


ரூத் ஃபோர்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் செய்த குற்றத்துக்காக அவரது கணவரே போலீசிடம் பிடித்துக் கொடுத்துள்ளார் என்பதுதான் இதில் நடந்த திருப்பமான சம்பவம். 


இதில் ரூத்தின் கணவர் ஆண்டனி குற்றத்தை கண்டுபிடித்த விதம்தான் விநோதமானது. ரூத் போர்ட் முதியோர் இல்லத்தில் பராமரிப்பாளராகப் பணியாற்றுபவர். இவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. ஆனால் 2018ம் ஆண்டில் மிக ஆடம்பரமாக தனது குடும்பத்துடன் மெக்சிகோவுக்கு பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்.


ரூத் ஃபோர்ட் முதியோர் இல்லத்தில் தான் பார்த்துக் கொள்ளவேண்டிய பெண்ணிடம் இருந்து சுமார் 7200 யுரோக்களைத் திருடியுள்ளார்.  ஆனால் இதுகுறித்து அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் அவர் தூக்கத்தில் இதை உளரப் போக அவர் கணவர் ரூத்தை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். மூன்று பிள்ளைகளுக்குப் பெற்றோரான ரூத் மற்றும் ஆண்டனி 2018ல் குடும்பத்துடன் மெக்சிகோவுக்கு பயணித்தது இந்தப் பணத்தில்தான் என அவருக்குத் தெரிய வந்துள்ளது. 


முதியோர் இல்லத்தில் இருந்த பெண்மணியின் டெபிட் கார்ட் அவரது மனைவியின் பர்சில் இருக்கப் போஅ உடனடியாக போலீசுக்குத் தெரியப்படுத்தியுள்ளார் ஆண்டனி. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் ரூத்தை மனப்பூர்வமாக நேசிக்கிறேன். ஆனால் அவர் செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு வலுவற்ற பெண்ணிடமிருந்து ரூத் பணத்தைத் திருடியுள்ளார் என்பது என்னால் சீரணிக்க முடியாதது.அதனால்தான் போலீசில் புகார் கொடுத்தேன்’ என 61 வயதான ஆண்டனி கூறியுள்ளார். ‘வீல் சேரில் தனது வாழ்வை  கழித்து வந்த அந்தப் பெண்மனியின் வங்கி கணக்கில் 98000 யூரோக்கள் இருந்ததாக ரூத் கூறினார். இதை அவர் சொன்ன விதம் எனக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தியது.ரூத்திடம் அவரது டெபிட் கார்டுக்கான பின் நம்பர் இருந்தது தெரியவந்தது. அதனால் எனது மனசாட்சி சொன்னது போல உடனடியாக செயல்பட்டேன். 


இந்த சம்பவம் நடந்தது 2018ல் அந்த சமயத்தில்தான் ரூத் பணத்தை கண்மூடித்தனமாகச் செலவிட்டு வந்துள்ளார். குடும்பம் பண நெருக்கடியில் இருந்தபோது ரூத்துக்கு மட்டும் செலவழிக்க எப்படி பணம் கிடைத்தது என அப்போதே சந்தேகித்ததாகவும் என்றாலும் ரூத் புத்திசாலி பணத்தை சேமித்து வைத்திருப்பார் எனத் தான் எண்ணியதாகவும் ஆண்டனி பகிர்ந்துள்ளார். மேலும் ரூத் பணத்தை திருடியிருப்பார் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ரூத்துக்கு தற்போது எபிலெப்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதனால் தற்காலிகமாக முதியோர் இல்லத்துக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டுள்ளார். இதற்கிடையேதான் அவர் தூக்கத்தில் தனது குற்றத்தைப் பற்றி பேசியுள்ளார். இதையடுத்து அவருக்கு 16 மாதகால ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.