உத்திரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி.யும், பிரபல ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் மர்ம நபர்களால் காவல்துறையினர் முன்பு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


பிரபல ரவுடி, முன்னாள் எம்.பி.


கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். இவரை  கடந்த 2007 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 


இதனிடையே  சில நாட்கள் முன்பு உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆதிக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும்  குலாம் ஆகியோர் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கும், எதிர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆசாத் மற்றும் குலாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


போலீசார் முன்பே சுட்டுக்கொலை:


இதனையடுத்து உமேஷ் பால் கொலை வழக்கில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய்யாகச் சிக்க வைத்து, தாங்கள் உத்தரப்பிரதேச காவல்துறையால் போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று கூறி, பாதுகாப்பிற்காக உச்சநீதிமன்றத்தில் ஆதிக் அகமது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இதனை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 


இப்படியான சூழலில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜ் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து இருவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் ஆதிக், அஷ்ரப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


உத்தரபிரதேசம் முழுவதும் 144:


இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார். ஆதிக் அகமது, அஷ்ரப் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.