கேரளாவின் எர்ணாகுளத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில மக்களின் நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

ஸ்ரீகுமாரி, அவரது மகள் அஸ்வதி எஸ் நாயர், அவரது மூன்று பிள்ளைகளான கர்ணிவன், கீர்த்தவன் மற்றும் இரண்டு வயது சிறுமி ஆகிய 5 பேரும் உயிரிழந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மருத்துவ சிகிச்சைக்காக வடுதலாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு திருவனந்தபுரம் மாவட்டம் விலாப்பிலசாலா தான் சொந்த ஊராகும். 

எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்டர் மெட்சிட்டி மருத்துவமனையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்தது. இதனால் தற்காலிகமாக அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. வீட்டை விரைவில் காலி செய்வதாக தெரிவித்திருந்த நிலையில் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பதாக உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மார்ச் 21ம் தேதி மதியம் அந்த வீட்டுக்கு அப்பகுதியைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் ஒரு வேலை விஷயமாக வந்திருக்கிறார். அப்போது ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்தபோது அங்கு ஸ்ரீகுமாரி மற்றும் அஸ்வதி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இதனைப் பார்த்து அலறிய அவர் உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்து விஷயத்தை சொல்ல காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 5 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஸ்ரீகுமாரியும் அஸ்வதியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் என்ன நடந்தது என்பது தெரியும் எனவும் கூறியுள்ளனர். அவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அறையில் இருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் மறைந்த கணவரின் குடும்பத்தினர் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மாமியார் வீட்டாரின் தொடர்ச்சியான தொல்லையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்றும் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அஸ்வதியின் கணவர் சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது குடும்பத்தினர் அதற்கு அஸ்வதி தான் காரணம் என தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)