காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சோவல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோய் யோங் சுக் மற்றும் நிறுவன பொது மேலாளர்  சோ ஜோவான் ஆகியோர்  ஜி.எஸ்.டி. வரியாக வாடிக்கையாளர்களிடம் வசூலித்த 40 கோடியே 37 ஆயிரத்து 448 ரூபாயை, மத்திய அரசுக்கு செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஜி.எஸ்.டி. உதவி ஆணையர் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதுக்குப் பின், அவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள அயல்நாட்டினருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.




இந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கூறி தங்களுடைய வீட்டிலேயே தாங்கள் தங்கிக் கொள்வதாக தொடர்ந்த வழக்கில் ஒரகடத்தில் உள்ள அவர்களது வீட்டிலேயே வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, தென்கொரிய தொழிலதிபர்கள் வீட்டுக்காவலில் இருந்தபோது போலியான ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி, போலி பாஸ்போர்ட் பெற்று இருவரும் வீட்டுக்காவலிலிருந்து தப்பி சென்றுவிட்டதாக இருவர் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் தயாரித்தது மற்றும் வீட்டுக்காவலில் இருந்து தப்பிச்சென்றது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள இரு வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், இரு வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.



இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் ஜி.எஸ்.டி. வரி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு, வீட்டுக்காவலில் இருந்த தென் கொரியர்கள் போலி பாஸ்போர்ட் மூலம் தப்பிச் சென்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். தென்கொரியர்கள் இருவரும் ஓரகடத்திலிருந்து தப்பித்து, ஹைதராபாத் வழியாக மணிப்பூர் வரை சென்றதாகவும் மேலும், இந்தியா - மியன்மார் எல்லையில் வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. அதற்கு தென் கொரிய தூதரக அதிகாரிகளே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்திய அதிகாரிகள் உதவியில்லாமல் தென்கொரிய தூதரக அதிகாரிகள் அவர்கள் இருவருக்கும் உதவியிருக்க முடியாது. இந்த விவகாரத்தில் தப்பி சென்ற தென்கொரியா தொழிலதிபர்களுக்கு உதவி செய்த தென்கொரிய தூதரக அதிகாரிகள் யார்? தென்கொரியா தூதரக அதிகாரிகளுக்கு உதவிசெய்த இந்திய அதிகாரிகள் யார் யார்? என்பது குறித்தான விசாரணையை சி.பி.ஐ., அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.