TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை, 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - தொடரும் பகீர் சம்பவங்கள்
TN Crime: சென்னையில் இரட்டைக் கொலை மற்றும் கிருஷ்ணகிரியில் 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள குற்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Crime: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இரட்டைக் கொலை..
சென்னை அருகே பல்லாவரம் திரிசூலத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இருவர் வெட்டிக் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட 20 வயதான ஆறுமுகம் மற்றும் 17 வயதான சதீஷ் ஆகிய இருவர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையில் இருந்து வெளியே வந்த இருவரும் வெவ்வேறு இடங்களில் மாறி மாறி தங்கி வந்துள்ளனர். அந்த வகையில் திரிசூலம் பகுதியில் மணி என்பவரது குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவரையும், சுமார் 8 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து வெட்டி சாய்த்துள்ளனர். குறிப்பாக ஒருவரின் முகம் மிகவும் மோசமாக வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக கூறப்படும் இந்த கொலையில், பல உடல் உறுப்புகள் துண்டாக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் கடந்த சில நாட்களாகவே பலர் கும்பல் கும்பலாக வந்து போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒபகவலசை கிராமத்தில் 75 வயது முதியவர் கொலை செய்யப்பட்டு, அவரது 70 வயது மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மர்ம நபர் கல்லை கொண்டு தாக்கியதாகவும், அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த அவரது மனைவியிடம் அத்துமீறி நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மீண்டும் ஒரு லாக்-அப் மரணம்?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 6ஆம் தேதி ஆகாஷ் டெலிசன் தனது நண்பருடன் சேர்ந்து, இருவரை அரிவாளால் வெட்டியதாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்ய முயன்றபோது போலீசாருக்கு பயந்து ஓடும்போது பாலத்திலிருந்து குதித்ததில் ஆகாஷின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெறும்போது திடீரென ஆகாஷுக்கு சுவாசக்குறைவு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக சிவகங்கை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் தாக்கியதால் ஆகாஷ் டெலிசன் உயிழந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கைதி ஆகாஷ் டெலிசனின் மரண வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி(பொறுப்பு) வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் பகீர் சம்பவங்கள்:
திமுக ஆட்சி அமைந்தது முதலே தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக, அதிமுக மற்றும் பாஜக உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்மையில் கூட நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து ஒரு கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தியது. அதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும், 19 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு மற்று இளைஞர்கள் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்ட-ஒழுங்கு குறைபாட்டை திமுகவிற்கு எதிரான ஆயுதமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தவும் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்























