Germany :  23 வயதான ஜெர்மன் பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் தன்னைப் போலவே தோற்றமளிக்க கூடிய பெண் ஒருவரை கொலை செய்து,  தனது சொந்த மரணத்தை போலியான முறையில் நிகழ்த்த முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக டெலிகிராப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த கொலை வழக்கு மிருகத்தனமான மற்றும் விநோதமான வழக்காகவும், "டாப்பல்கேஞ்சர் கொலை" என்றும் அழைக்கப்படுகிறது.



குற்றம் சாட்டப்பட்டுள்ள  ஷஹ்ராபன் கே என்ற 24 வயதான  பெண் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை உருவாக்கி, அவரைப் போன்ற பெண்களை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.   தனது போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கட்டமான தேடுதலுக்குப்  பிறகு குற்றம் சாட்டப்பட்ட பெண், தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து 100 மைல்களுக்கு அப்பால் வசித்த அல்ஜீரியாவைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய கதிட்ஜா ஓ என்ற ஒரு அழகுசாதன பொருட்களை தயாரிப்பாளரைக் கண்டுபிடித்துள்ளார். இரு பெண்களும் நீண்ட கருமையான கூந்தலும் ஒரே மாதிரியான நிறமும் கொண்டிருந்தனர். 

போலிஸாரின் கூற்றுப்படி, ஷஹ்ரபான் கே மற்றும் அவரது காதலன் ஷேகிர் கே, 24, கதிஜாவை அணுகி அழகு சாதனப் பொருட்களை வழங்கி, அழைத்துச் செல்லச் சென்றுள்ளனர். அதன் பின்னர், திரும்பிச் செல்லும்போது, ​​அவர்கள் ஒரு காட்டில் நிறுத்தி, பாதிக்கப்பட்டவரை 50 முறைக்கு மேல் கத்தியால் சரமாரியாக குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.


ஷஹ்ரபான் கே தனது முன்னாள் கணவரை சந்திக்கப் போவதாக அவரிடம் கூறியிருந்தார். ஷாஹ்ராபன் திரும்பி வராததால், அவளது பெற்றோர் இங்கோல்ஸ்டாட்டில் அவளைத் தேடிச் சென்று டானூப் அருகே அவளது மெர்சிடஸ் காரைக் கண்டனர்.


காரின் பின் இருக்கையில், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கருமையான இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது, அது அவர்களின் மகள் என்று அவர்கள் கூறியதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.


போலிஸாரின் கூற்றுப்படி, சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே பல கத்திகள் காணப்பட்டதாகவும், ஷேகிர் கேயின் குடியிருப்பில் இருந்து வெகு தொலைவில் கார் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


பிரேதப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ சோதனைகளுக்குப் பிறகு, கொல்லப்பட்டது உண்மையில் கதிட்ஜா ஓ என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஷாரபான் கே மற்றும் சேகிர் கே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


காரின் உரிமையாளருக்கும் இறந்தவர்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையால் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இங்கோல்ஸ்டாட் வழக்கறிஞரான வெரோனிகா க்ரீசர் பில்ட் செய்தித்தாளிடம் கூறுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர் தன்னைப் போலவே தோற்றமளிக்கும் பல பெண்களை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது”.


"குற்றவாளி தனது குடும்பத்துடனான உள் தகராறுகளால் அவரது சொந்த மரணத்தினைப் போன்று ஒன்றை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருக்க விரும்பியுள்ளார்." இதுதான் கொலைக்கான அடிப்படைக் காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- அழகு சாதனை பொருளை தந்த பின்னர், ​​காரில் திரும்பி வரும்போது ஏற்கனவே திட்டமிட்டபடி வாகனத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, உடலில் 50க்கும் மேற்பட்ட கத்திக்குத்துகளுடன் மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் கொல்லப்பட்டார் கதிஜா. பாதிக்கப்பட்டவர் 50க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்களுடன் கொல்லப்பட்டார் மற்றும் அவரது முகத்தில் மோசமான மற்றும் கொடூரமான காயம் ஏற்பட்டுள்ளது எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.