அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமியை 1998 ல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தது தொடர்பாக அருப்புக்கோட்டையை சேர்ந்த வீரபாரதிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை குறைத்த பிறகும் தன்னை முன்னரே விடுதலை செய்ய கோரி  மனுத்தாக்கல் செய்தார். 

 

பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும் அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை என காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில்  தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 



விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புளியம்பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 1998 மார்ச் 4 ஆம் தேதி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முருகன், வீரபாரதி, உபயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1999 இல் உத்தரவிட்டது.

தண்டனையை எதிர்த்து மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்  மூவரது தூக்கை, ஆயுள் தண்டனையாக மாற்றியது. தண்டனை பெற்ற உபயதுல்லா இறந்து விட்ட நிலையில், மற்ற  இருவரும் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்தனர். அப்போது வீரபாரதி  பாளையங்கோட்டை சிறைக்கும், பின்னர் சென்னை புழல் சிறைக்கும் வீரபாரதி மாற்றப்பட்டார்.

இதனிடையே, வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். 

 

வழக்கில் தானே ஆஜராகி வாதிடுவதாகக் கூறியதையடுத்து, 2019 ஜனவரியில் நீதிமன்றம் வீரபாரதிக்கு பரோல் வழங்கியது. சுமார் இரண்டரை ஆண்டுக்கு மேலாக பரோலில் இருந்தவாறே தனது வழக்கை வீரபாரதி நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை முடிந்து விட்டதால், மனுதாரரை சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டும் எனத் உத்தரவிட்டது. இதையடுத்து மனுதாரர் புழல் சிறையில் சரணடைந்தார்.

 

இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு  பிறப்பித்த உத்தரவு: 

 

மனுதாரர் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் இருந்தபோது, விசாரணை கைதிகளிடம் ஜாமீன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகவும், அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் காவல் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதைக் கூர்ந்து கவனித்த அரசு, அறிக்கையின் அடிப்படையில், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்த வழக்கில் அரசின் முடிவு சரியானது. எனவே, மனுதாரர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.