தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி வைத்தீஸ்வரிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ளத்தனமாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வைத்தீஸ்வரிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது. இதேபோல் ராமராஜனுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராமராஜனும், வைத்தீஸ்வரியும் கடந்த ஐந்து வருடங்களாக கள்ளத்தனமாக உறவு வைத்து வந்துள்ளனர். இந்த உறவு இரு வீட்டிற்கும் தெரிந்து பல்வேறு பிரச்சனைகள் வந்த நிலையிலும் கூட இவர்களின் கள்ளத்தனமான உறவு நிறுத்தப்படவில்லை. 

 



 

மேலும் ராமராஜன் திருட்டு சம்பவங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருந்ததாக தெரிகிறது. கடந்த மாதம் தீபாவளி அன்று வைத்தீஸ்வரியை தனியாக வரவழைத்து நாம் இருவரும் செத்து விடலாம் என்று சொல்லி மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்திருக்கிறார். “நான் குடிக்கின்றேன் நீயும் குடி” என்று வைத்தீஸ்வரி கூறியதற்கு, “நான் ஏற்கனவே குடித்து விட்டேன் நீ குடி” என்று சொல்லி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு வைத்தீஸ்வரியை அழைத்துச் சென்று வீட்டின் அருகாமையில் விட்டு விட்டு இவர் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வைத்தீஸ்வரி மயக்க நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள், அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கே மருத்துவர்கள் உயிர்பிழைப்பது கடினம் தான் என்று சொல்லியதால், வைத்தீஸ்வரியை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வைத்தீஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதனை தொடர்ந்து சடலத்தை அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து வந்துள்ளனர்.

 

அப்பொழுது வைத்தீஸ்வரியை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு  தலைமறைவாக உள்ள கள்ளக் காதலன் ராமராஜனை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ராமராஜன் என்பவர், பல குடும்ப பெண்களிடம் கள்ளத்தனமான உறவு வைத்து கொண்டு, இதுவரை மூன்று குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.