திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்தின்போதோ வரதட்சணைக் கேட்கவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்த கேரள உயர்நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கேட்டாலும் வரதட்சணைத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகள் பொருந்தும் என்று கூறி, விஸ்மயா வரதட்சணை கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துள்ளது.


விஸ்மயா வழக்கு


ஜூன் 21, 2021 அன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தம்கோட்டாவில் தனது கணவன் வீட்டில் 23 வயதான ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா இறந்து கிடந்தார். மே மாதம் அந்த பெண்ணை வரதட்சணைக் கொடுமையால் தற்கொலைக்குத் தூண்டியதன் காரணமாக முன்னாள் உதவி மோட்டார் வாகன ஆய்வாளரான அவரது கணவர் கிரண் குமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரிய மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் அலெக்சாண்டர் தாமஸ் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, திருமணத்திற்கு முன் வரதட்சணை தேவை இல்லை என்று கிரண் குமார் எழுப்பிய வாதத்தை ஏற்க மறுத்தது. கிரண் குமார் தனது முறையீட்டில், குழந்தைக்காக ஏங்கித் தவித்ததால் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாகவும், தந்தையின் ஆசீர்வாதம் இல்லாமல் கர்ப்பம் தரிக்க முடியாது என்றும் பயந்துதான் தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். 



ஆதாரங்களை மேற்கோளிட்ட நீதிமன்றம்


எவ்வாறாயினும், அதன் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாய்வழி மற்றும் ஆவண ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, விஸ்மயா தனது கணவரால் கொடுமை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளானார் என்பது நிரூபிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றம் கூறியது. விசாரணையில் கூறப்பட்ட விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், திருமணத்திற்குப் பிறகு, வரதட்சணைக்காக குமார் தனது மனைவியை துன்புறுத்தியதையும், தாக்கியதையும் குமாரின் அடுத்தடுத்த நடத்தை காட்டுகிறது என்று குறிப்பிட்டது. 


தொடர்புடைய செய்திகள்: வாள்.. லிவ்-இன் உறவு.. துண்டாய் வெட்டப்பட்ட காதலி..கேரளாவில் ஒரு டெல்லி சம்பவம்.. பதறவைத்த கொடூரம்


மொபைல் உரையாடல்கள்


திருமணத்திற்கு முன்பு நடந்த மொபைல் உரையாடலைக் கருத்தில் கொண்டு குமாருக்கு எந்த நிவாரணமும் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது, "திருமணத்திற்கு முன் எந்த கோரிக்கையும் இல்லை என்று கூறினாலும், ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மேல்முறையீட்டாளரின் அடுத்தடுத்த நடத்தைகள், திருமணத்திற்குப் பிறகு, அவர் கொடுத்த கார் காரணமாக இறந்தவரை துஷ்பிரயோகம் செய்து தாக்கினார் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த தங்க ஆபரணங்களின் போதவில்லை என்று கூறியதற்கும் ஆதாரம் உள்ளது,” என்று நீதிமன்றம் கூறியது.



திருமணத்திற்கு பின் கேட்டாலும் குற்றம்தான்


வரதட்சணைத் தடைச் சட்டத்தின் 2-வது பிரிவில் இடம் பெற்றுள்ள “கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது” என்ற வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு திருமணத்தின் போது உடன்பாடு இருக்க வேண்டும் என்ற குமாரின் வழக்கறிஞர் வாதம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் தெரிவித்தது. சட்டத்தின் 2வது பிரிவில் வரதட்சணையின் திருத்தப்பட்ட வரையறை, "வரதட்சணை என்பது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்தின் போது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிந்தைய காலத்தையும் உள்ளடக்கியது" என்று நீதிமன்றம் கூறியது. மேலும் கிரண் குமாரின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தபோது தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. பிரிவு 498A (வரதட்சணைக்காக ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்) கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததற்காக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) மற்றும் 304பி (வரதட்சணை மரணம்) மற்றும் வரதட்சணைத் தடைச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவையும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.